» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
சசி தரூரை கழுதை என்று விமர்சித்த விவகாரம்: காங்கிரஸ் தலைவர் மன்னிப்புக் கோரினார்!
வெள்ளி 17, செப்டம்பர் 2021 5:16:35 PM (IST)
காங்கிரஸ் எம்.பி. சசிதரூரை கழுதை என்று விமர்சித்த தெலுங்கானா காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி மன்னிப்புக்கேட்டுள்ளார்.
நாடாளுமன்ற தகவல் தொழில்நுட்ப நிலைக்குழு தலைவராக இருக்கும் காங்கிரஸ் எம்.பி. சசி தரூர், ஹைதராபாத் சென்றபோது தெலங்கானா மாநில தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சரின் செயல்பாடுகளை பாராட்டினார். அங்கு தெலங்கானா ராஷ்டிரிய சமிதி ஆளும் கட்சியாக உள்ள நிலையில் காங்கிரஸ் எதிர்க்கட்சியாக உள்ளது. தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியைச் சேர்ந்த அமைச்சரவை காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் புகழ்ந்தது அம்மாநில காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மாநில காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி, சசி தரூரை கடுமையாக விமர்சித்து கழுதை எனக்கூறினார். மேலும் "ஆங்கிலத்தில் சரளமாக பேசுவதால் அவர் விஷயம் தெரிந்தவர் என்று அர்த்தமில்லை. கட்சி அவரை நீக்கும் என நம்புகிறேன். தெலங்கானா ராஷ்டிர சமதி கட்சியின் அமைச்சரை புகழும் அவர் இங்குள்ள மக்களின் நிலையை பற்றியும் தெரிந்து கொண்டிருக்க வேண்டும்.” என கடுமையாக விமர்சித்தார்.
சொந்த கட்சியின் மூத்த தலைவரை ரேவந்த் ரெட்டி விமர்சித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ரேவந்த் ரெட்டியை கண்டித்தனர். இதனையடுத்து சசி தரூரை தொடர்புக்கொண்டு ரேவந்த் ரெட்டி தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார். இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள அவர் ‘‘எனது கருத்துக்களை திரும்பப் பெறுகிறேன். கட்சியில் உள்ள சக தலைவர்களை மிகவும் மதிக்கிறேன். என் வார்த்தைகளால் அவருக்கு ஏற்பட்ட காயத்திற்கு வருந்துகிறேன்” என கூறியுள்ளார். அவரது மன்னிப்பை ஏற்றுக்கொண்டதாக சசி தரூரும் பதிலுக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.