» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
கேரளத்தில் பிளஸ் 1 மாணவர்களுக்கு நேரடித் தேர்வு நடத்த இடைக்கால தடை : உச்சநீதிமன்றம் உத்தரவு
வெள்ளி 3, செப்டம்பர் 2021 5:31:28 PM (IST)
கேரளத்தில் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 6-ல் அறிவிக்கப்பட்டிருந்த நேரடித் தேர்வுகளுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
நாடு முழுவதும் கரோனா குறைந்து வரும் நிலையில், கேரளத்தில் மட்டும் நாள்தோறும் 30,000க்கும் அதிமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், கேரளத்தில் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 6ஆம் தேதி பள்ளிகளில் நேரடி தேர்வுகள் நடத்த மாநில அரசு அறிவித்திருந்தது.
இந்த அறிவிப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பில், கேரளத்தில் கரோனா பரவல் அதிகரிப்பால் அபாயகரமான சூழல் நிலவி வருகிறது. நாள்தோறும் 35,000 பேர் பாதிக்கப்படும் நிலையில் குழந்தைகளை ஆபத்தில் விடமுடியாது. ஆகையால், கேரள அரசின் அறிவிப்பிற்கு இடைக்கால தடைவிதித்து அடுத்த விசாரணையை செப்டம்பர் 13ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக நீதிபதி தெரிவித்தார்.