» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
உச்சநீதிமன்ற வரலாற்றில் முதல்முறை: ஒரே நேரத்தில் 9 புதிய நீதிபதிகள் பதவியேற்பு!
புதன் 1, செப்டம்பர் 2021 5:01:13 PM (IST)
உச்சநீதிமன்ற வரலாற்றில் முதல் முறையாக ஒரே நேரத்தில் 3 பெண் நீதிபதிகள் உட்பட 9 நீதிபதிகளும் நேற்று (ஆக.,31) பதவியேற்றனர்.
உச்சநீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட மொத்த நீதிபதி பணியிடங்கள் 34. இதில் எட்டு பணியிடங்கள் காலியாக இருந்த நிலையில், சமீபத்தில் இரு நீதிபதிகள் ஓய்வு பெற்றனர். இதையடுத்து உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 24ஆக குறைந்தது.
நீதிபதி காலிப் பணியிடங்களை நிரப்ப தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையில் நீதிபதிகள் யு.யு.லலீத், ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட், எல்.நாகேஸ்வர ராவ் ஆகியோரைக் கொண்ட உச்சநீதிமன்ற கொலீஜியம், நீதிபதி பணியிடங்களுக்கான பெயர்களை இறுதி செய்தது. அதில், 3 பெண் நீதிபதிகள் உள்பட 9 பெயர்கள் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. கொலீஜியம் பரிந்துரைத்த 9 நீதிபதிகளையும் நியமிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. ஜனாதிபதியும் ஒப்புதல் அளித்து உத்தரவிட்டார்.
அதன்படி, கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அபை ஸ்ரீநிவாஸ் ஒகா, குஜராத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி விக்ரம் நாத், சிக்கிம் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஜிதேந்திர குமார் மகேஷ்வரி, தெலங்கானா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஹிமா கோலி, கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி பி.வி. நாகர்த்தனா, கேரள உயர்நீதிமன்ற நீதிபதி சி.டி.ரவிகுமார், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எம்.எம். சுந்தரேஷ், குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதி பெலா திரிவேதி ஆகியோர் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக பதவியேற்றனர்.
உச்சநீதிமன்ற வளாகத்தில் உள்ள அரங்கில் இந்த பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. தலைமை நீதிபதி என்.வி.ரமணா, 9 நீதிபதிகளுக்கும் பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். 9 புதிய நீதிபதிகள் பதவியேற்றதை அடுத்து உச்சநீதிமன்றத்தில் மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது. உச்சநீதிமன்ற வரலாற்றில் முதல்முறையாக 9 நீதிபதிகள் ஒரேநேரத்தில் இன்று பதவியேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.