» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
மைசூரு மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை : தமிழ்நாட்டைச் சேர்ந்த 5பேர் கைது
சனி 28, ஆகஸ்ட் 2021 5:39:14 PM (IST)
மைசூரு கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் வெளிமாநில தொழிலாளர்கள் 5பேரை கர்நாடக காவல்துறையினர் கைது செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
மைசூருவில் 23 வயது மருத்துவ மாணவியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய வழக்கில் அண்டை மாநிலமான தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐவரை கர்நாடக காவல்துறையினர் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான தகவலில், "தமிழ்நாட்டைச் சேர்ந்த வெளிமாநில தொழிலாளர்கள் கூலி வேலைக்காக பாண்டிபால்யாவுக்கு சென்றுள்ளனர். இது குற்றம் நடைபெற்ற இடமான ஆலனஹள்ளியிலிருந்து எட்டிலிருந்து 9 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. செல்ப்பேசியின் மூலம் குற்றம்சாட்டப்பட்டவர்கள் பிடிப்பட்டுள்ளனர்.
காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையின் காரணமாக குற்றம்சாட்டப்பட்டவர்கள் சுற்றிவலைக்கப்பட்டனர். திருட்டு, மிரட்டல் போன்ற குற்றச் செயல்களில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் ஏற்கனவே ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. முறையான புகார் அளிக்கப்படாததால் இதுநாள் வரை அவர்கள் கைது செய்யப்படவில்லை" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மைசூருவுக்கு சென்றுக்கொண்டிருந்த கர்நாடக காவல்துறை இயக்குநர் பிரவீன் சூட், வழக்கு குறித்த தகவல்களை உறுதிப்படுத்த மறுத்துவிட்டார்.
கடந்த ஆகஸ்ட் 24ஆம் தேதி மாலை, மைசூரு லலித்ரிபுரா பகுதியில் உள்ள திப்பையனகெரே வனப்பகுதியிலிருந்து தனது ஆண் நண்பருடன் பாதிக்கப்பட்ட மாணவி வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது, அடையாளம் தெரியாத ஐவர் மாணவியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவி இன்னும் காவல்துறைக்கு வாக்குமூலம் அளிக்கவில்லை. இதன் காரணமாக, காவல்துறையினர் குற்றம்சாட்டப்பட்டவர்களைப் பிடிப்பதில் செல்ப்பேசி உள்ளிட்ட தொழில்நுட்ப வசதி முக்கிய பங்காற்றியது.