» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
கரோனா பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கைகளை: மகாராஷ்டிர, கேரள அரசுக்கு மத்திய அரசு கடிதம்
சனி 28, ஆகஸ்ட் 2021 12:22:58 PM (IST)
அச்சுறுத்தி வரும் கரோனா பரவலை கட்டுப்படுத்த 5 தடுப்பு நடவடிக்கைகளை கையாளுமாறு கேரளம் மற்றும் மகாராஷ்டிர அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.
நாட்டில் இன்று காலை 9 மணி வரையிலான 24 மணி நேரத்தில் 46,759 பேருக்கு புதிதாக கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,26,49,947-ஆக உயா்ந்துள்ளது. 31,374 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நோய்த் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 3,59,775 -ஆக உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்புக்கு 375 பேர் உயிரிழந்தனர். இதனால், மொத்த கரோனா உயிரிழப்பு 4,33,964 -ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கேரளத்தில் மட்டும் 32,801 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 1,801 பரிசோதனைகளில் தொற்று பாதிப்பு இருப்பஉறுதி செய்யப்பட்டுள்ளது. சிகிச்சையில் இருந்தவர்களில் 198 பேர் உயிரிழந்துள்ளனர், 18,503 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இந்த நிலையில் தொற்று பரவலை கட்டுப்படுத்த மீண்டும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கை அமல்படுத்த கேரளம் அரசு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், அச்சுறுத்தும் கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த 5 தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேரளம் மற்றும் மகாராஷ்டிரம் அரசின் தலைமைச் செயலர்களுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதியுள்ளார்.
அதில், நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் வீடு வீடாக சென்று கண்காணித்தல், பரிசோதனை எண்ணிக்கையை அதிகரித்தல், முழு வீச்சில் கரோனா தடுப்பூசியை செலுத்துவது, தொடர்ந்து தனிமனித இடைவெளியை கடைப்பிடித்தல், தொற்று பாதித்தவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்து தொடர்ந்து கண்காணித்தல் உள்ளிட்ட மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை மேற்கொள்ளுமாறும், கட்டுப்பாடுகளை அதிகப்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் நாட்டிலேயே கேரளத்தில் தொற்று பாதிப்பு மிகவும் உச்சத்தில் இருப்பது கவலையளிப்பதாக உள்ளது என தெரிவித்துள்ளார்.