» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
ஆப்கானிஸ்தான் விவகாரம்: பிரதமர் மோடி - ரஷ்ய அதிபர் புதின் பேச்சு
செவ்வாய் 24, ஆகஸ்ட் 2021 3:28:06 PM (IST)
ஆப்கானிஸ்தான் தலீபான்கள் வசம் வந்துள்ள நிலையில், பிரதமர் மோடி - ரஷ்ய அதிபர் புதின் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து 20 ஆண்டுகளுக்குப் பின் ஆப்கானிஸ்தானை மீண்டும் தலீபான்கள் கைப்பற்றியுள்ளனர். புதிய அரசை அமைக்க தலீபான்கள் தீவிரம் காட்டி வரும் நிலையில், அந்த நாட்டு மக்கள் உயிர் பிழைத்தால் போதும் என்ற எண்ணத்தில் அங்கிருந்து தப்பி வருகின்றனர்.
இதனால் ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து பதற்றமும் குழப்பமும் இதனால் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன. ஆப்கானிஸ்தானின் இந்த நிலைமைக்கு அமெரிக்கா தான் காரணம் என உலக நாடுகள் பலவும் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன. ஆனால் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆப்கானிஸ்தானில் இருந்து படைகளை திரும்பப் பெற்றதற்காக வருந்தவில்லை என்றும் தனது முடிவில் உறுதியாக இருப்பதாகவும் கூறி வருகிறார்.
ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்து ஜி 7 நாடுகளின் கூட்டமைப்பு தலைவர்கள் இன்று ஆலோசனை நடத்த உள்ளனர். இந்த நிலையில், இந்திய பிரதமர் மோடி- ரஷ்ய அதிபர் புதின் ஆகிய இரு தலைவர்களும் இன்று தொலைபேசி வாயிலாக பேசினர். சுமார் 45 நிமிடங்கள் நீடித்த இந்த பேச்சுவார்த்தையின் போது ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.