» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
இந்தியாவில் கரோனா 3-வது அலை அக்டோபர் மாதம் உச்சமடையும் : நிபுணர் குழு அறிக்கை
செவ்வாய் 24, ஆகஸ்ட் 2021 8:47:40 AM (IST)
இந்தியாவில் கரோனா 3-வது அலை அக்டோபர் மாதம் உச்சமடையலாம் என பிரதமர் அலுவலகத்தில் நிபுணர் குழு அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
இந்தியாவில் இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 25,072 பேருக்கு புதிதாக கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால், நாட்டில் கரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3,24,49,306 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 3,33,924 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கரோனா பாதிப்பில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் 44,157 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3,16,80,626 ஆக அதிகரித்துள்ளது. ஆனாலும், கரோனா தாக்குதலுக்கு கடந்த 24 மணிநேரத்தில் 389 பேர் உயிரிழந்து உள்ளனர். இதனால், இந்தியாவில் கரோனா தாக்குதலுக்கு உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4,34,756 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், இந்தியாவில் கரோனாவின் 2-வது அலை தற்போது மெல்ல குறைந்து வரும் நிலையில் கரோனாவின் 3-வது அலை ஏற்படும் சூழ்நிலை உருவாகி வருகிறது. அந்த வகையில், இந்தியாவில் கரோனாவின் 3-வது அலை எப்போது உச்சமடையும் என்பது குறித்த அறிக்கை பிரதமர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பு பிரதமர் அலுவலகத்திடம் சர்ப்பித்துள்ள அறிக்கையில் இந்தியாவில் கரோனாவின் 3-வது அலை இந்த ஆண்டு அக்டோபர் மாதம் உச்சமடையலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.