» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
குதிரை மீது பாஜக வர்ணம் பூசப்பட்ட விவகாரம் : விலங்குகள் நல அமைப்பு புகார்
சனி 21, ஆகஸ்ட் 2021 11:51:02 AM (IST)
மத்திய அமைச்சரின் யாத்திரையில் குதிரை மீது பாஜக வர்ணம் பூசப்பட்ட விவகாரம் தொடர்பாக விலங்குகள் நல அமைப்பு புகார் தெரிவித்துள்ளது.
மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தலைமையில் மத்திய பிரதேசம் இந்தூரில் நேற்று முன்தினம் மக்கள் ஆசி யாத்திரை நடைபெற்றது. இதில் பா.ஜ.க. கொடியின் காவி மற்றும் பச்சை வண்ணம் பூசப்பட்ட குதிரை ஒன்று கொண்டுவரப்பட்டது. குதிரை மீது தாமரை சின்னமும் நீல நிறத்தில் வரையப்பட்டிருந்தது. இந்தக் குதிரையை மாநகராட்சி முன்னாள் கவுன்சிலர் ராம்தாஸ் கர்க் வாடகைக்கு அமர்த்தி இருந்தார்.
இந்நிலையில் இது தொடர்பாக விலங்குகள் தன்னார்வ அமைப்பு சார்பில் இந்தூரின் சன்யோகிதகஞ்ச் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.விலங்குகள் சித்ரவதை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என புகாரில் கோரப்பட்டுள்ளது. மேலும் தேர்தல் ஆணையத்திடமும் இவர்கள் புகார் அளிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. பா.ஜ.க. எம்.பி. மேனகா காந்தியால் இந்த விலங்குகள் நல அமைப்பு நிறுவப்பட்டது. அதன் தலைவராகவும் மேனகா காந்தி பொறுப்பு வகிப்பது குறிப்பிடத்தக்கது.