» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
சிலிண்டர் விலையை உயர்த்தி பாஜக அரசின் வசூல் திட்டம் செழித்து வருகிறது: பிரியங்கா காந்தி
புதன் 18, ஆகஸ்ட் 2021 4:57:37 PM (IST)
ஒவ்வொரு மாதமும் சிலிண்டர் விலையை உயர்த்தி பாஜக அரசின் வசூல் திட்டம் செழித்து வருகிறது என காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார்.
சா்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப ஒவ்வொரு மாதத்தின் முதல் தேதி மற்றும் 15-ஆம் தேதி சமையல் எரிவாயு உருளையின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து வருகின்றன. கடந்த ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு உருளையின் விலை ரூ.825 இருந்த நிலையில் ஜூலை 1 -ஆம் தேதி ரூ.25 உயர்த்தப்பட்டு ரூ.850 ஆக நிர்ணயிக்கப்பட்டது.
அதன்பிறகு சரியாக ஒன்றரை மாதங்களுக்குப் பிறகு ஆகஸ்ட் 17ஆம் தேதியான இன்று, மீண்டும் சமையல் எரிவாயு உருளையின் விலை ரூ.25 உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் ஒரு எரிவாயு உருளை ரூ.875-க்கு விற்பனையாகிறது. ஏற்கனவே கரோனா பெருந்தொற்றினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதுடன் பெட்ரோல், டீசல் விலையும் பல்வேறு நகரங்களில் ரூ. 100-யைக் கடந்துள்ளது. இத்துடன் சமையல் எரிவாயுறு உருளையின் விலையும் அதிகரித்துள்ளது மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
சமையல் எரிவாயு உருளை விலை உயர்வுக்கு எதிர்க்கட்சிகள் பலவும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், 'மத்திய அரசு ஜூலை 1 ஆம் தேதி, சமையல் எரிவாயு உருளை விலையை ரூ. 25 ஆக உயர்த்தியது, ஆகஸ்ட் 17 அன்று மீண்டுமஅவற்றின் விலையை ரூ.25 உயர்த்தியது. உஜ்வாலா யோஜனாவின் கனவைக் காட்டி, ஒவ்வொரு மாதமும் சிலிண்டர்களின் விலையை உயர்த்தி அதன் மூலமாக பாஜக அரசின் வசூல் திட்டம் செழித்து வருகிறது' என்று விமர்சித்துள்ளார்.