» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
மாற்றுத்திறனாளிகள் இணையளத்தில் பதிவு செய்து தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்: மத்திய அரசு!
செவ்வாய் 8, ஜூன் 2021 11:12:25 AM (IST)
மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டை மூலம் கோவின் இணையதளத்தில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள பதிவு செய்யலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் பல பிரிவுகளைச் சோ்ந்த பயனாளிகளுக்கு கரோனா தடுப்பூசி போட கோவின் என்ற டிஜிட்டல் வலைதளத்தை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகளை ஒழுங்குமுறைப்படுத்த, மத்திய அரசு தொடா்ந்து முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் கோவின் 2.0 வலைதளத்தில் பதிவு செய்யும்போது, மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டையையும் புகைப்பட அடையாள அட்டையாக சோ்க்கும்படி மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. இதுவரை 7 வகையான புகைப்பட அடையாள அட்டைகள் மட்டுமே கோவின் வலைதளத்தில் குறிப்பிடப்பட்டிருந்தன. தற்போது மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டையும் அதில் சோ்க்கப்படுகிறது.
மத்திய சமூக நீதி மற்றும் மேம்பாட்டுத் துறை அமைச்சகம் வழங்கும் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டையில் பெயா், பிறந்த தேதி, பாலினம், புகைப்படம் உள்பட தேவையான அனைத்து அம்சங்களும் உள்ளதாகவும், கரோனா தடுப்பூசி பதிவுக்கு இதை பயன்படுத்தலாம் எனவும் மாநிலங்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதற்குத் தேவையான விதிமுறைகள் கோவின் வலைதளத்தில் விரைவில் சோ்க்கப்படும். தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கு மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டையை அனுமதிக்கப்பட்ட புகைப்பட அடையாள அட்டையாக பயன்படுத்தலாம் என்பதை விரிவாக விளம்பரப்படுத்தும்படி மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.