» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
கரோனா சிகிச்சைக்கு ஆனந்தையா லேகியத்தை பயன்படுத்தலாம் : ஆந்திர அரசு ஒப்புதல்
திங்கள் 31, மே 2021 5:06:01 PM (IST)
பக்க விளைவுகள் இல்லாததால் கரோனா சிகிச்சைக்கான ஆயுர்வேத மருந்துக்கு ஆந்திர அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
ஆந்திர மாநிலம், கிருஷ்ணபட்னம் கிராமத்தை சேர்ந்த ஆனந்தையா, கடந்த சில நாட்களாக கரோனாவுக்கு லேகியம், கசாயம் ஆகிய நாட்டு மருந்துகளை பொதுமக்களுக்கு வழங்கி வருகிறார். பல்வேறு வகையான மூலிகை பொருட்களை கொண்டு தயார் செய்யப்படும் ஆனந்தையாவின் நாட்டு மருந்தை அந்தப் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மட்டும் அல்லாமல், அண்டை மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்களும் அதிக அளவில் குவிந்து வருகின்றனர்.
இந்நிலையில் இது குறித்து ஆயுஷ் அமைச்சகம் மற்றும் திருப்பதி தேவஸ்தான ஆயுர்வேத நிபுணர்கள் ஆய்வு நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக அறிக்கைகள் வெளி வர 2-3 வாரங்கள் ஆகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பக்க விளைவுகள் இல்லை என நிரூபணமானதால், கரோனா சிகிச்சைக்கு ஆயுர்வேத மருந்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. லேகியத்திற்கு மட்டும் ஒப்புதல் அளித்துள்ள ஆந்திர அரசு, கண்ணில் விடப்படும் சொட்டு மருந்துக்கு தடை விதித்துள்ளது. ஆனந்தையா உருவாக்கிய ஆயுர்வேத மருத்துவத்துவம் அல்லாது மற்ற மருந்துகளையும் தொடர்ந்து பயன்படுத்துமாறு மாநில அரசு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.