» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
தகுதி வாய்ந்த அனைவருக்கும் 2021 இறுதிக்குள் தடுப்பூசி - மத்திய அரசு உறுதி
திங்கள் 31, மே 2021 5:00:55 PM (IST)
2021 இறுதிக்குள் தகுதி வாய்ந்த இந்திய குடிமக்கள் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு விடும் என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நாட்டில் கரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி மாதம் தொடங்கியது. முதல்கட்டமாக முன்களப் பணியாளர்கள், 2-வது கட்டமாக 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், 3-வது கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்டவர்கள், தற்போது 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டு வருஇகிறது. ஆனால், கரோனா தடுப்பூசி பற்றாக்குறை என்று காங்கிரஸ் மூத்த தலைவர் உட்பட பலர் மத்திய அரசை குறை கூறி வருகின்றனர்.
மேலும், இந்திய மக்களுக்கு கொடுக்காமல், வெளிநாடுகளுக்கு இலவசமாக வழங்கியது ஏன் என்று கேள்வி எழுப்பி உள்ளனர். வரும் டிசம்பர் மாதத்துக்குள் நாட்டில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என மத்திய அரசு உறுதி கூறி வருகிறது. இந்நிலையில் நாட்டின் கரோனா பரவலை தடுக்க மத்திய அரசு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தக் கோரிய வழக்கை உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து விசாரித்து வருகிறது.
இந்த வழக்கில் கரோனா பரவலை கட்டுப்படுத்த அனைவருக்கும் தடுப்பூசி போடும் திட்டத்தை செயல்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பிய இருந்தது. இந்த நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ‘‘இந்தியாவில் பாரத் பயோடெக் மற்றும் சீரம் நிறுவனம் மூலம் இரண்டு வகையான கரோனா தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
இந்தியாவில் 18- வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் டிசம்பருக்குள் தடுப்பூசி செலுத்த இதுவே போதுமானது.இதுமட்டுமின்றி மற்ற நாடுகளில் இருந்தும் கரோனா தடுப்பூசி வாங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. எனவே தடுப்பூசி தட்டுப்பாடு ஏதுமில்லை. நிர்ணயிக்கப்பட்ட இலக்கில் தடுப்பூசி செலுத்தப்படும். கொரோனவை ஒழிப்பதில் தடுப்பூசி முக்கிய பங்கு வகிக்கிறது. ’’ எனத் தெரிவித்தார்.
மத்திய அரசின் சார்பில் பதில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது அந்த மனுவில் தெரிவிக்கபட்டுள்ளதாவது: நாடு முழுவதும் 18- வயதுக்கு மேற்பட்ட தகுதி வாய்ந்த இந்திய குடிமக்கள் அனைவருக்கும் இந்த ஆண்டு இறுதிக்குள் கண்டிப்பாக கரோனா தடுப்பூசி செலுத்த மத்திய அரசு இலக்கு நிர்ணயித்து செயல்பட்டு வருகிறது. இந்த இலக்கு நிச்சயமாக எட்டப்படும். இதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.