» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
பெட்ரோல் விலை ஒரே மாதத்தில் 16-வது முறையாக உயர்வு - லிட்டர் ரூ.95.76-க்கு விற்பனை!!
திங்கள் 31, மே 2021 12:50:43 PM (IST)
ஊரடங்கு காலத்திலும் பெட்ரோல் விலை ஒரே மாதத்தில் 16-வது முறையாக உயர்ந்துள்ளது. லிட்டர் ரூ.95.76-க்கு விற்பனை ஆகிறது.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணை விலையின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணை நிறுவனங்களே நிர்ணயித்துக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.இதன்படி பெட்ரோல், டீசல் விலையை எண்ணை நிறுவனங்கள் நாள்தோறும் நிர்ணயித்து வருகின்றன. கடந்த 2017-ம் ஆண்டு முதல் தினசரி நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது.
இதைத்தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை மிக அதிக அளவில் உயரத் தொடங்கியது. அதிலும் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து இவற்றின் விலை ராக்கெட் வேகத்தில் உயர்கிறது. கடந்த மாத தொடக்கத்தில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் காணப்பட்ட நிலையில் இந்த மாத தொடக்கத்தில் இருந்தே ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை தொட்ட வண்ணம் உள்ளது. 2 நாட்களுக்கு ஒருமுறை பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்த் தப்பட்டு வருகிறது.
சென்னையில் நேற்று பெட்ரோல் லிட்டர் ரூ.95.51-க்கும், டீசல் லிட்டர் ரூ.89.65-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 25 காசுகள் அதிகரித்து ரூ.95.76-க்கும், டீசல் விலை லிட்டருக்கு 25 காசுகள் அதிகரித்து ரூ.89.90-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த மாதத்தில் மட்டும் பெட்ரோல், டீசல் விலை 16-வது முறையாக உயர்த்தப்பட்டு உள்ளது. அந்த வகையில் பார்க்கும்போது ஒரு மாதத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.33 காசும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.4.15 காசும் உயர்ந்து உள்ளது குறிப்பிடத்தக்கது. பெட்ரோல், டீசல் விலை உயர்வு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இந்த முழு ஊரடங்கு காலத்திலும் சாமானிய மக்களை பாதித்துள்ளது.