» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

டெல்லியில் தொற்று குறைந்தாலும், கரோனாவுக்கு எதிரான போர் முடியவில்லை: கேஜ்ரிவால்

சனி 29, மே 2021 4:53:58 PM (IST)

டெல்லியில் தினசரி கரோனா தொற்று 900 ஆக குறைந்துள்ளது, எனினும் கரோனாவுக்கு எதிரான போர் மட்டும் முடியவில்லை என டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கூறியுள்ளார்.

டெல்லியில் கரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் வந்ததையடுத்து, வரும் 31ஆம் தேதி முதல் ஊரடங்கு தளர்வுகள் படிப்படியாகச் செய்யப்படும். முதலில் கட்டுமானப் பணிகள், தொழிற்சாலைகளை ஒரு வாரத்துக்கு இயக்க அனுமதிக்கப்படும் என்று முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் இன்று அறிவித்தார். டெல்லியில் கடந்த மாதம் 20ஆம் தேதி கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்தது. 29 ஆயிரம் பேர் அதிகபட்சமாக பாதிக்கப்பட்டனர். 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இதையடுத்து, தீவிரமான, தளர்வுகள் அற்ற ஊரடங்கை முதல்வர் கேஜ்ரிவால் அறிவித்தார். ஏறக்குறைய ஒரு மாதத்துக்கும் மேல் ஊரடங்கு நடைமுறையில் இருந்த நிலையில், அங்கு கரோனா பாசிட்டிவ் 1.5 சதவீதத்துக்கும் கீழாகச் சரிந்தது. தினசரி பாதிப்பு 1,100 ஆகச் சரிந்தது. இதையடுத்து டெல்லியில் ஊரடங்கைப் படிப்படியாகத் தளர்த்தும் பணியை டெல்லி அரசு தொடங்கியுள்ளது. இதுகுறித்து முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் இன்று கூறியதாவது:

டெல்லியில் தினசரி கரோனா தொற்று பாதிப்பு ஆயிரத்திற்கும் கீழே குறைந்துள்ளது. நேற்று 900 பேருக்கு மட்டுமே பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இரண்டாவது அலை தொடங்கிய பிறகு கரோனா தொற்று ஆயிரத்திற்கும் கீழே குறைவது இது முதன்முறை. டெல்லியில் ஆக்சிஜன் உதவியோடு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை பெருமளவு குறைந்துவிட்டது. படுக்கைகள், ஆக்சிஜன் வசதிகள், ஐசியூ படுக்கைகளுக்கு பற்றாக்குறை இல்லை. ஆனால், கரோனாவுக்கு எதிரான போர் மட்டும் முடியவில்லை

இந்த எண்ணிக்கை மகிழ்ச்சியை அளிக்கிறது. ஒத்துழைப்பு அளித்த டெல்லி மக்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அதேசமயம் கரோனா பரவல் முற்றிலுமாக ஒழிக்கப்படும் வரை மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிப்பது அவசியம். மக்கள் தேவையின்றி வெளியே வரக்கூடாது. டெல்லியில் கரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் வந்துவிட்டதாக உணர்கிறேன். 

ஆதலால், வரும் 31-ம் தேதி முதல் ஊரடங்கைப் படிப்படியாகத் தளர்த்தும் நடவடிக்கை தொடங்க திட்டமிட்டுள்ளோம். ஒரு வாரத்துக்கு கட்டுமானப் பணிகளுக்கும், தொழிற்சாலைகள் இயங்கவும் அனுமதிக்கப்படும். இதன் மூலம் கரோனா வைரஸுக்கு எதிரான போர் முடிந்துவிட்டதாக அர்த்தம் இல்லை. கரோனா வைரஸிலிருந்து தப்பித்த மக்கள் பட்டினியில் இறந்துவிடக் கூடாது என்பதற்காகவே ஊரடங்கு தளர்த்தப்படுகிறது. இவ்வாறு அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital








Thoothukudi Business Directory