» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
தடுப்பூசிக்கு பயந்து ஆற்றில் குதித்த மக்கள்
செவ்வாய் 25, மே 2021 4:07:42 PM (IST)
அறியாமை மற்றும் குழப்பத்தின் காரணமாக அதிகாரிகள் மற்றும் தடுப்பூசிக்கு பயந்து கிராம மக்கள் ஆற்றில் குதித்த சம்பவம் உத்தரபிரதேசத்தில் நடந்தது.
கரோனா தடுப்பூசி குறித்து மக்களின் மனதில் நிறைய குழப்பங்களும், அச்சங்களும் உள்ளன. கிராமப்புறங்களில் வாழும் மக்களுக்கு தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு இல்லை. உத்தரபிரதேச மாநிலம் பராபங்கி மாவட்டம் சிசோடா கிராமத்திற்கு தடுப்பூசி போடுவதற்காக சுகாதார ஊழியர்கள் சென்றனர். ஆனால், தடுப்பூசி போடுவதற்காக அதிகாரிகள் வருவதைக் கண்ட கிராம மக்கள், அப்பகுதியில் ஆற்றில் கும்பலாக சென்று குதித்தனர்.
அதிர்ச்சியடைந்த துணை மாவட்ட அலுவலர் ராஜீவ் சுக்லா மற்றும் நோடல் அதிகாரி ராகுல் திரிபாதி உள்ளிட்ட அதிகாரிகள், கிராம மக்களை சமாதானப்படுத்தி ஆற்றில் இருந்து தரைப்பகுதிக்கு வரும்படி வேண்டிக் கேட்டுக் கொண்டனர். அதன்பின் ஆற்றைவிட்டு வெளியே வந்தனர். இந்த கிராமத்தில் தடுப்பூசி போட தகுதியான 1,500 பேரில் 14 பேர் மட்டுமே தடுப்பூசி போட ஒப்புக்கொண்டனர். பராபங்கி மாவட்டம் மட்டுமல்ல, மற்ற மாவட்டங்களில் உள்ள கிராம மக்களும் தடுப்பூசி குறித்து குழப்பத்தில் உள்ளனர். இதற்கு முக்கிய காரணம் சமூக ஊடகங்களில் பல்வேறு தவறான செய்திகள் பரப்பப்படுவதுதான் என்கின்றனர் அதிகாரிகள்.