» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
கருப்பு பூஞ்சை விஷயத்தில் உடனடி நடவடிக்கை : பிரதமர் மோடிக்கு சோனியா காந்தி கடிதம்
ஞாயிறு 23, மே 2021 10:33:05 AM (IST)
கருப்பு பூஞ்சைக்கு மருந்துகள் வழங்குவதை உறுதிப்படுத்துமாறு பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கட்சித்தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதி உள்ளார்.
கரோனா வைரஸ் தொற்று பரவலுக்கு மத்தியில், அந்த தொற்றுக்கு ஆளானவர்களுக்கு ‘மியூகோர்மைகோசிஸ்’ எனப்படுகிற கருப்பு பூஞ்சை நோய் தாக்குவது கண்டறியப்பட்டுள்ளது. இது கண்பார்வை இழப்பு, உறுப்புகள் பாதிப்பு, உயிரிழப்பு போன்ற ஆபத்துகளை ஏற்படுத்தும் என டாக்டர்கள் கூறுகின்றனர்.
சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்காதவர்களையும், கரோனாவில் இருந்து விடுபட அதிகளவில் ஸ்டீராய்டு மருந்து எடுத்துக்கொண்டு நோய் எதிர்ப்புச்சக்தி குறைந்தவர்களையும் இந்த கருப்பு பூஞ்சை பாதிக்கிறது என்பது மருத்துவ நிபுணர்களின் கருத்தாக உள்ளது. பல மாநிலங்களுக்கு இந்த நோய் பரவி இருப்பது பதற்றத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.
இந்த நோய் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நேற்று கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-
* தொற்றுநோய்கள் சட்டத்தின் கீழ் மியூகோர்மைகோசிஸ் என்னும் கருப்பு பூஞ்சை நோயை அறிவிக்க வேண்டும் என்று மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம் எழுதி இருக்கிறது. இதற்கு அர்த்தம், போதுமான அளவில் மருந்துகள் தயாரிக்கப்பட வேண்டும், இந்த நோய் தாக்கியவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு அத்தியாவசியமான மருந்துகள் வினியோகிப்பதை உறுதி செய்ய வேண்டும், நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை, பராமரிப்புவேண்டும் என்பதாகும்.
* இந்த கருப்பு பூஞ்சை நோய் சிகிச்சைக்கு லிபோசோமல் ஆம்போடெரிசின்-பி அத்தியாவசியமானது என்பதை புரிந்து கொள்கிறேன். ஆனாலும் இந்த மருந்துக்கு சந்தையில் கடும் தட்டுப்பாடு நிலவுவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
* கருப்பு பூஞ்சை நோய், ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டுத்திட்டத்திலோ, பெரும்பாலான சுகாதார காப்பீட்டு திட்டங்களிலோ சேர்க்கப்படவில்லை. இந்த நிலையில் கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு நிவாரணம் அளிப்பதற்கு இந்த விஷயத்தில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு சோனியா காந்தி அந்தக் கடிதத்தில் கூறிஉள்ளார்.
adminமே 23, 2021 - 03:05:55 PM | Posted IP 162.1*****