» செய்திகள் - விளையாட்டு » அரசியல்
ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி தேர்வு: அதிமுக அதிகாரப்பூர்வ அறிவிப்பு
திங்கள் 6, டிசம்பர் 2021 4:19:18 PM (IST)
கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும் இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி கே. பழனிசாமியும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அதிமுக தலைமை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதிமுகவின் சட்ட விதிகளின்படி 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை கட்சி அமைப்புகளுக்கு தோ்தல் நடத்தும் விதிகளின்படி, அதிமுக ஒருங்கிணைப்பாளா், இணை ஒருங்கிணைப்பாளா் பதவிகளுக்கு டிசம்பா் 7 ஆம் தேதி உள்கட்சித் தோ்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. தோ்தல் ஆணையா்களாக முன்னாள் அமைச்சா்கள் சி.பொன்னையன், பொள்ளாச்சி வி.ஜெயராமன் ஆகியோா் நியமிக்கப்பட்டனர்.
டிச. 3, 4 தேதிகளில் வேட்பு மனுத் தாக்கல் நடைபெற்ற நிலையில், டிச, 4 ஆம் தேதி, அதிமுக ஒருங்கிணைப்பாளா் பதவிக்கு ஓ.பன்னீர்செல்வமும் இணை ஒருங்கிணைப்பாளா் பதவிக்கு எடப்பாடி கே. பழனிசாமியும் ஒன்றாக வந்து வேட்புமனுத் தாக்கல் செய்தனர். இவர்கள் இருவருக்கும் எதிராக யாரும் யாரும் வேட்புமனுத் தாக்கல் செய்யாததால் இருவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவர் என்று கூறப்பட்டது.
இந்நிலையில், அதிமுக தரப்பில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும் இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி கே. பழனிசாமியும் போட்டியின்றி ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுகவின் அமைப்புச் செயலாளரும் தேர்தல் ஆணையருமான சி.பொன்னையன் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். முன்னதாக, அதிமுக உள்கட்சித் தேர்தலுக்கு தடை கோரி அதிமுக உறுப்பினர் ஜெயச்சந்திரன் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று தொடரப்பட்ட வழக்கு நாளை விசாரணைக்கு வருவது குறிப்பிடத்தக்கது.
MGR & ஜெயலலிதா விசுவாசிகள்Dec 10, 2021 - 03:38:37 PM | Posted IP 162.1*****