» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
தூத்துக்குடி கிரஸண்ட் பள்ளியில் 75வது சுதந்திர தின விழா
திங்கள் 16, ஆகஸ்ட் 2021 11:07:38 AM (IST)
தூத்துக்குடி கிரஸண்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நாட்டின் 75வது சுதந்திர தின விழா நடைபெற்றது.
விழாவிற்கு பள்ளியின் தாளாளர் காதர் ஷரீப் தலைமை வகித்தார். தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியர் டாக்டர் ஜேம்ஸ் சுந்தர் சிங் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றி வைத்து தற்போதைய சூழலை வெல்லும் வழிவகை குறித்து பேசினார். ஆன்லைன் பேச்சுப் போட்டி மற்றும் கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு அழைப்பாளர் முன்னாள் இராணுவ அதிகாரி செல்லத்துரை பரிசுகள் வழங்கி பாராட்டினார்.
விழாவில், முதலமைச்சரின் கோவிட் நிவாரண நிதிக்கு தன்னுடைய சேமிப்பிலிருந்து ரூ.1456/- வழங்கிய நான்காம் வகுப்பு மாணவி யாழினி ஸ்ரீகுமாரியை பாராட்டி பரிசு வழங்கப்பட்டது. சுதந்திர தினத்தை முன்னிட்டு பள்ளி வளாகத்தில் 75 மரக் கன்றுகள் நடும் திட்டம் தூத்துக்குடி மாவட்ட ஜவான்கள் நலச் சங்கத்துடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டது. முதல் மரக்கன்றை டாக்டர் ஜேம்ஸ் சுந்தர் சிங் நட்டு மரம் நடு விழாவை தொடங்கி வைத்தார்.
தமிழக அரசின் கொரோனா தடுப்பு வழிமுறைகளின் படி நடைபெற்ற இவ்விழாவில் முதல்வர் செய்யது அலி, துணை முதல்வர் இம்ரான் கான் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை ஆசிரியை வள்ளிநாயகி தொகுத்து வழங்கினார். முன்னதாக ஆசிரியர் பிரபாகரன் வரவேற்புரை ஆற்றினார். நிறைவாக ஆசிரியை பெரிய நாயகி நன்றியுரையாற்றினார்.
HABIBUR RAHMAN.I ( Alumni of crescent)Aug 16, 2021 - 01:38:44 PM | Posted IP 162.1*****