» சினிமா » செய்திகள்

பஞ்சாங்கம் குறித்து மாதவன் கூறிய கருத்து சரியானது : மயில்சாமி அண்ணாதுரை விளக்கம்!

செவ்வாய் 28, ஜூன் 2022 4:07:01 PM (IST)



பஞ்சாங்கம் குறித்து மாதவன் கூறிய கருத்து சரியானது என்று, இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கூறியுள்ளார். 

இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன், ராக்கெட் ரகசியங்களை வெளிநாட்டுக்கு விற்றதாக கைதாகி, அதனால் அவர் அனுபவித்த துன்பங்களும், அதிலிருந்து அவர் மீண்டுவந்து தன்னை நிராபராதி என்று நிரூபித்த சட்டப் போராட்டங்களையும் தழுவி ராக்கெட்ரி நம்பி விளைவு" படம் எடுக்கப்பட்டுள்ளது. மாதவன் நடித்து, இயக்கி, தயாரித்துள்ள இந்தப் படத்தில் கதாநாயகியாக சிம்ரனும், கௌரவ தோற்றத்தில் நடிகர்கள் ஷாருக்கான், சூர்யா ஆகியோரும் நடித்துள்ளனர்.  தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, ஆங்கிலம் ஆகிய 5 மொழிகளில், வருகிற 1-ம் தேதி இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகிறது. 

இந்நிலையில்,,நடிகர் மாதவன் சென்னையில் சில தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறிய கருத்துக்கள் சமூக வலைதளங்களில் விவாத பொருளாக மாறியது, அந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் செய்தியாளர் ஒருவர், உலகத்தில் பல நாடுகள் இருந்தாலும், நம் நாட்டில் மட்டும் விஞ்ஞான சாஸ்திரம், வானியல், கோள்கள் உள்ளிட்டவற்றை நம் முன்னோர்கள் கணித்திருந்தார்கள். அதற்கும் இப்போது உள்ள விஞ்ஞானத்திற்கும் தொடர்பு இருக்கிறதா என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்து பேசிய மாதவன் நிச்சயமாக தொடர்பு இருக்கு. மார்ஸ் மிஷன் என்பது பூமியிலிருந்து, செவ்வாய் கிரகம் வரை அந்த செயற்கைகோள் சென்று சேருவதுதான். அமெரிக்கா, நாசா, ரஷ்யா, சீனா, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகள் பல முறை 800 மில்லியன், 900 மில்லியன் என கோடிக்கணக்கில் செலவு செய்து 30,32 முறைகள் செவ்வாய் கிரகத்திற்கு செயற்கைக்கோளை அனுப்பி இறுதியில் வெற்றி பெற்றார்கள். அதிநவீன என்ஜின் தொழில்நுட்பத்தின் மூலம் அவர்கள் இந்த வெற்றியைப் பெற்றனர்.

ஆனால் இந்தியாவிடம் இருக்கும் என்ஜின் மிகவும் சிறியது. அவர்களது விண்கலம் செல்லும் தூரத்தை விட குறைவாகத்தான் செல்லும். இருந்தாலும் இந்தியா கடந்த 2014-ம் ஆண்டு செவ்வாய் கிரகத்திற்கு செயற்கைக்கோளை அனுப்பியது. ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து செவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் செலுத்தும் போது, 1000 வருடங்களுக்கு முன்பே கணித்து வைத்த செலஸ்டியல்னு சொல்ற பஞ்சாங்கம் மூலம் துல்லியமாக மற்ற கிரங்களை எல்லாம் தவிர்த்துவிட்டு நேரடியாக அனுப்பினாங்க.

நம்பி நாராயணனின் மருமகன் அருணண், அவர் தான் மங்கள்யான் (செவ்வாய்) திட்டத்தின் இயக்குநர். அவர் இந்தக் கதையை சொல்ல சொல்ல அப்படியே புல்லரிச்சு போயிருச்சு. பஞ்சாங்கம் வானியல் வழிமுறை வரைபடத்தைப் பார்த்து ஈர்ப்பு விசையை பயன்படுத்தி மைக்ரோ செகண்ட்டில் செவ்வாய்க்கு இஸ்ரோ செயற்கைக் கோளை அனுப்பியுள்ளது. அது வெற்றிகரமாகத் தனது வேலையைச் செய்தது. மின்சாரம் இல்லாமல், சின்ன பட்ஜெட்டில் செயற்கைகோள் அனுப்பப்பட்டதற்கு காரணம் இந்த பஞ்சாங்கம் தான். 

இந்த மாதிரி நம்ம நாட்டிலேயே பல விஷயங்கள் இருக்கு. ஹாலிவுட்ல இதுபோன்ற படங்கள் தயாரிக்கப்படுவதை பார்த்து அவங்கதான் மேதைங்கனு உலகமே நம்புகிறதுஆனால் அவர்களை காட்டிலும் திறமையான பல விஞ்ஞானிகள் நம் நாட்டில் இருக்காங்க. இங்க சாதிக்க முடியலனு அங்க போய் சாதிக்கிறாங்க. உலக நாடுகளில் டாப் கம்பெனிகளில் 13 தலைமை செயல் அதிகாரிகள் நம் இந்தியர்கள் தான். முக்கியமாக தமிழர்கள், இவ்வாறு அவர் பேசியிருந்தார்.

இதையடுத்து மங்கள்யான் திட்டத்திற்கு இந்து பஞ்சாங்கம் தான் உதவியதா என பிரபல இசைக்கலைஞரான டி.எம். கிருஷ்ணா உள்பட நெட்டிசன்கள் பலரும் மாதவன் பேசியதை விமர்சனம் செய்து தங்களது சமூகவலைதள பக்கத்தில் பதிவுகளை வெளியிட்டனர்.

டி.எம்.கிருஷ்ணா தனது ட்விட்டரில், இஸ்ரோவின் இணையதளத்திலேயே இந்த செய்தி வெளியிடாதது ஏமாற்றத்தை அளிக்கிறது என்றும், மேற்கத்திய நாட்டு ராக்கெட்டுகள், செவ்வாய் கிரகத்தின் சுற்றுப்பாதையில் தங்களைத் தாங்களே செலுத்துவதற்கு உதவும் மூன்று இயந்திரங்களான (திட, திரவ மற்றும் கிரையோஜெனிக்) ஆகியவை இந்திய ராக்கெட்டுகளில் இல்லை, எனினும் பஞ்சாங்கத்தில் இந்த விஷயங்கள் உள்ளதால் அதனை பயன்படுத்தி செவ்வாய் கிரகத்துக்கு ராக்கெட் அனுப்பப்பட்டது என்றும் நகைச்சுவையாகவும், மறைமுகமாகவும் மாதவனை சாடியுள்ளார்.

இதேபோல் நெட்டிசன்கள் பலரும் மாதவனை கிண்டல் செய்து வருகின்றனர். "ஒரே ஒரு படத்தை இயக்கிவிட்டு எல்லாவற்றையும் அதிலேயே கண்டுபிடித்தாரா?" என்று நெட்டிசன் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார். "இது என்ன முட்டாள்தனம்? அறிவியலுடன் பஞ்சாங்கம்? கடவுளே என் நாட்டைக் காப்பாற்று" என மற்றொரு நெட்டிசன் தெரிவித்துள்ளார். "விஞ்ஞானம் என்பது எல்லோருக்கும் விருப்பமானது அல்ல. அறிவியல் தெரியாவிட்டாலும் பரவாயில்லை.

ஆனால் உண்மையில் எவ்வாறு விஞ்ஞானம் செயல்படுகின்றன என்பது பற்றி உங்களுக்குத் தெரியாதபோது உங்கள் வாயை மூடிக்கொண்டு இருப்பது நல்லது; சில வாட்ஸ்அப் விஷயங்களை மேற்கோள் காட்டி உங்களை நீங்களே கேலிக்கு ஆளாக்கி கொள்ளாதீர்கள்” இவ்வாறு ஒரு நெட்டிசன் கூறியுள்ளார்.

இந்தநிலையில் திருச்சியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த சந்திராயன் திட்ட தலைவரும், இஸ்ரோவில் விஞ்ஞானியாக பணியாற்றி ஓய்வுபெற்ற மயில்சாமி அண்ணாதுரை நடிகர் மாதவன் பேச்சு குறித்து கூறியிருப்பதாவது, உலகம் முழுவதும் கோள்களின் நகர்வுகள், இடமாற்றங்களை கணிப்பதுதான் பஞ்சாங்கம். இதனை ஆங்கிலத்தில் ஆல்மனாக்(Almanac) என்று அழைப்பார்கள், இவற்றின் உதவியோடுதான் ஒரு செயற்கைகோளை விண்ணில் ஏவ முடியும், ஒரு குறிப்பிட்ட கோளுக்கு செயற்கைகோளை அனுப்பவேண்டும் என்றால் அந்தக் கோள் எங்கு நிற்கிறது என்பதை பஞ்சாங்கம் வழியாகவே கணிக்க முடியும். 

மாதவன் கூறியதில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கணிக்கப்பட்ட பஞ்சாங்கம் என்ற வார்த்தை மட்டும்தான் தவறு, மற்றபடி பஞ்சாங்கத்தின் உதவியுடன்தான் செயற்கைகோள்கள் துல்லியமாக ஏவப்படுகின்றன. பஞ்சாங்கம் ஆண்டுக்கு ஆண்டு துல்லியமாக கணிக்கப்பட வேண்டும், பஞ்சாங்கம் தப்பு என்று கூறுவது தவறு பஞ்சாங்கத்தை வைத்து ஜோசியம் கூறுவதும் தவறு, இவ்வாறு மயில்சாமி அண்ணாதுரை கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory