» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
இந்தியா - தென்னாப்பிரிக்கா டி-20 தொடர் சமனில் முடிந்தது!
திங்கள் 20, ஜூன் 2022 12:03:32 PM (IST)
இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் 2-2 என சமனில் முடிந்தது. தொடர் நாயகன் விருதை இந்திய வேகப் பந்துவீச்சாளர் புவனேஸ்வர் குமார் வென்றுள்ளார்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 4-வது டி20 ஆட்டத்தில் இந்தியா 82 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 5-வது டி20 ஆட்டம் பெங்களூரில் நேற்று நடைபெற்றது. இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 3.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 28 ரன்கள் எடுத்த நிலையில் மழை காரணமாக ஆட்டம் தடைபட்டது. மழை தொடர்ந்து பெய்ததால் ஆட்டம் கைவிடப்பட்டது. டி20 தொடர் 2-2 என சமனில் முடிந்தது. தொடர் நாயகன் விருதை இந்திய வேகப் பந்துவீச்சாளர் புவனேஸ்வர் குமார் வென்றுள்ளார். அவர் 6 விக்கெட்டுகள் எடுத்தார்.
சர்வதேச கிரிக்கெட்டில் அதிகமுறை தொடர் நாயகன் விருதை வென்ற இந்திய வேகப் பந்துவீச்சாளர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார் புவனேஸ்வர் குமார். இதற்கு முன்பு ஜாகீர் கானுடன் இணைந்து முதலிடத்தில் இருந்தார். மேலும் டி20 கிரிக்கெட்டில் இருமுறை தொடர் நாயகன் விருதை வென்ற ஒரே இந்திய வேகப் பந்துவீச்சாளரும் புவனேஸ்வர் குமார் தான். இதற்கு முன்பு 2018-ல் தென்னாப்பிரிக்காவில் இவ்விருதை முதல்முறையாக வென்றார்.
இதனிடையே இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான கடைசி டி20 போட்டி மழையால் ரத்தானதால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். இதையடுத்து ரசிகர்களுக்கு 50 சதவீத கட்டணம் திருப்பி வழங்கப்படும் என்று கர்நாடக கிரிக்கெட் சங்கம் அறிவித்து உள்ளது.