» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
விசா ரத்து விவகாரம்: சட்டப் போராட்டத்தில் வென்றார் ஜோகோவிச்!
செவ்வாய் 11, ஜனவரி 2022 10:27:42 AM (IST)
ஆஸ்திரேலியாவிற்குள் நுழைவதற்கான விசா ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் நடைபெற்ற சட்ட போராட்டத்தில் வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் வெற்றி பெற்றுள்ளார்.
கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு மட்டுமே வரும் 17-ல் தொடங்க உள்ள ஆஸ்திரேலிய ஓபனில் பங்கேற்க அனுமதி என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல் போட்டியில் பங்கேற்க நோவக் ஜோகோவிச் கடந்த வியாழக்கிழமை மெல்பர்ன் சென்றார். அப்போது விமான நிலையத்தில் அவரை விசாரித்த எல்லை பாதுகாப்புப்படை அதிகாரிகள் போதுமான மருத்துவ ஆவணங்கள் இல்லை எனக்கூறி ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய அனுமதி மறுத்து விசாவை ரத்துசெய்தனர். தொடர்ந்து ஜோகோவிச்சை நாடுகடத்தும் ஒரு பகுதியாக மெல்பர்ன் விமான நிலையம் அருகே உள்ள விடுதியில் தனிமைப்படுத்தி வைத்தனர்.
இதை எதிர்த்து ஜோகோவிச் தரப்பில் ஃபெடரல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதுதொடர்பாக நேற்று மெய்நிகர் விசாரணை நடைபெற்றது. அப்போது, கடந்த மாதம் ஜோகோவிச் கரோனாவால் பாதிக்கப்பட்டதற்கான ஆதாரம் இருப்பதால் தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான ஆதாரம் தேவையில்லை என்று அவர் தரப்பில் வாதிடப்பட்டது.
6 மாதங்களுக்குள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தடுப்பூசி விதியில் இருந்து தற்காலிக விலக்கு அளிக்கப்படலாம் என்று ஆஸ்திரேலிய மருத்துவ அதிகாரிகள் உறுதி கொடுத்துள்ளதும் எடுத்துக் கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து நீதிபதி அந்தோணி கெல்லி தனது தீர்ப்பில், அரசு தரப்பு விசா முடிவை கைவிட ஒப்புக்கொண்டுள்ளது. இதனால் ஓட்டலில் தனிமைப்படுத்துதலில் வைக்கப்பட்டுள்ள ஜோகோ விச்சை 30 நிமிடங்களில் விடுவிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.