» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
கடைசி ஆட்டத்திலும் நியூஸி.யை வீழ்த்தியது: டி20 தொடரை முழுமையாக வென்றது இந்தியா!
திங்கள் 22, நவம்பர் 2021 10:07:25 AM (IST)
நியூஸிலாந்துக்கு எதிரான கடைசி டி20 ஆட்டத்தில் இந்தியா 73 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதையடுத்து 3 ஆட்டங்கள் கொண்ட தொடரை 3-0 என முழுமையாக வென்றது இந்தியா.
கொல்கத்தாவில் நேற்று நடந்த நியூஸிலாந்து அணிக்கு எதிரான கடைசி மற்றும் 3-வது டி20 போட்டியில் இந்திய அணி 73 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் சேர்த்தது. 185 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய நியூஸிலாந்து அணி 17.2ஓவர்களில் 111 ரன்களில் ஆட்டமிழந்து 73 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இந்த வெற்றியின் மூலம் நியூஸிலாந்துக்கு எதிராக தொடர்ந்து 2-வது டி20 தொடரையும் இந்திய அணி கைப்பற்றிய பெருமையைப் பெறுகிறது. கடந்த ஆண்டு நியூஸிலாந்துக்கு எதிராக டி20 தொடரை வென்றநிலையில் அடுத்த நடந்த இந்தத் தொடரையும் இந்திய அணி வென்றுள்ளது. இந்திய அணிக்கு முழுநேரக் கேப்டனாகப் பதவி ஏற்றுள்ள ரோஹித் சர்மா, பயிற்சியாளர் ராகுல் திராவிட் ஆகியோரின் வழிகாட்டலுக்கு கிடைத்த பரிசாக அமைந்துள்ளது.
இந்திய அணியைப் பொறுத்தவரை அக்ஸர் படேல், வெங்கடேஷ், புவனேஷ் கட்டுக்கோப்பாகப் பந்துவீசினர். சஹல், சஹர் இருவருமே இன்னும் ரன்களை வாரி வழங்கினர். சிறப்பாக பந்துவீசி 9 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்திய அக்ஸர் படேல் ஆட்டநாயகன் விருது பெற்றார். டி20 போட்டியில் அக்ஸர் படேலின் சிறந்த பந்துவீச்சாக அமைந்தது.