» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
டென்னிஸ் பந்து கிரிக்கெட் போட்டியில் வெற்றி: தூத்துக்குடி அணி வீரர்களுக்கு கனிமொழி எம்பி வாழ்த்து
வியாழன் 19, ஆகஸ்ட் 2021 5:09:28 PM (IST)
மாநில அளவில் டென்னிஸ் பந்து கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற தூத்துக்குடி அணியினருக்கு கனிமொழி எம்பி வாழ்த்து தெரிவித்தார்.
டென்னிஸ் பந்து கிரிக்கெட் விளையாட்டு போட்டிhயானது 18.07.2021 அன்று நாமக்கல் மாவட்டம் குமாரமங்கலத்தில் மாவட்டங்களுக்கிடையிலான சீனியர் பிரிவு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கான டென்னிஸ் பந்து கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதுமிருந்து மொத்தம் 21 மாவட்ட அணிகள் கலந்து கொண்டார்கள். இப்போட்டியில் கலந்து கொண்ட தூத்துக்குடி மாவட்ட ஆண்கள் அணயினர் திண்டுக்கல், விழுப்புரம், செங்கல்பட்டு, மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்ட அணிகளை வென்று மாநிலத்தில் மூன்றாமிடம் பெற்றனர்.
தூத்துக்குடி மாவட்ட அணியில் சிறப்பாக விளையாடிய அனிஷ்குமார், வில்லியம்ஸ் ரிச்சர்டு மற்றும் கண்ணதாசன் ஆகியோர் செப்டம்பர் 2021ல் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் நடைபெறவுள்ள தேசிய போட்டியில் கலந்து கொள்ளவுள்ள தமிழ்நாடு மாநில அணிக்கு தேர்வாகியுள்ளார்கள். தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, தேசிய போட்டியில் கலந்து கொள்ளவுள்ள தமிழ்நாடு மாநில அணிக்கு தேர்வாகியுள்ள வீரர்களுடன் கலந்துரையாடி, அவர்களின் விளையாட்டு வளர்ச்சிக்கு தேவையான அனைத்து உதவிகளும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் செய்து தரப்படும் என கூறினார்கள்.
இந்நிகழ்ச்சியில், உதவி ஆட்சியர் பயிற்சி ஸ்ருதயஞ் ஜெய் நாராயணன், கோவில்பட்டி கோட்டாட்சியர் சங்கரநாரயணன், தூத்துக்குடி மாவட்ட டென்னிஸ் பந்து கிரிக்கெட் சங்கத் தலைவர் சேவியர் ஜோதி சற்குணம், துணைத் தலைவர் ஜெயகிருஷ்ணன், முக்கிய பிரமுகர் ஜெகன் பெரியசாமி, வட்டாட்சியர் அமுதா, பொருளாளர் டாக்டர். கோபினாத், துணைச் செயலாளர் புஷ்பராணி புஷ்பராஜ், செயற்குழு உறுப்பினர் தெய்வமுத்து, தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் இயக்குநர்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் முனைவர் பெரியதுரை ஆகியோர் கலந்து கொண்டனர்.