» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
இந்தியாவை வீணாக விமர்சிக்கலாமா? சர்வதேச ஊடகங்களுக்கு ஹைடன் கண்டனம்
புதன் 19, மே 2021 12:06:10 PM (IST)
கரோனாவை கட்டுப்படுத்தும் பணியில் இந்தியா தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதனை அறியாத சில சர்வதேச ஊடகங்கள் தவறாக விமர்சிக்கின்றன. இதனை ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் கண்டித்துள்ளார்.
இது குறித்து இவர் வெளியிட்டுள்ள கட்டுரை: கரோனா இரண்டாவது அலையை எதிர்த்து இந்தியா போராடி கொண்டிருக்கிறது. சுமார் 140 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டில், பொது மக்களுக்கான எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்துவது சவாலானது. இதனை அறியாமல் உலக மீடியா தேவையில்லாமல் விமர்சிக்கின்றன. கடந்த 10 ஆண்டுகளாக இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளேன்.
தமிழகத்தை ஆன்மிக தலமாக கருதுகிறேன். என் மீது அன்பு செலுத்திய இந்திய மக்களுக்கு கடமைப்பட்டிருக்கிறேன். கிரிக்கெட் வீரராகவும் இந்தியாவுடன் தொடர்பு உண்டு. நானும் சக வீரர்களும் ஐ.பி.எல்., போட்டிகளில் பங்கேற்க பல முறை இந்தியா சென்றுள்ளோம். இப்படி இந்தியாவை பல ஆண்டுகளாக கூர்ந்து கவனித்தவன் என்ற முறையில், தற்போது மக்கள் படும் வேதனை, ஊடகங்களின் தவறான விமர்சனத்தை பார்க்கும் போது என் இதயம் ரத்தம் சிந்துகிறது.
பல்வேறு கலாசாரம் கொண்ட பெரிய நாட்டை வழிநடத்தும் இந்திய தலைவர்கள், அரசு அதிகாரிகள் மீது மரியாதை வைத்துள்ளேன். நான் புள்ளிவிவர புலி அல்ல. ஆனாலும் பத்திரிகைளில் வந்த செய்திகள் அடிப்படையில் பார்த்தால், இந்தியாவில் சமார் 16 கோடிக்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன. இது 5 மடங்கு ஆஸ்திரேலிய மக்கள் தொகைக்கு சமம். தினமும் 13 லட்சம் கரோனா பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன. இவ்வளவு பெரும் எண்ணிக்கையில் சவாலான பணிகள் நடக்கின்றன. இவற்றை சாதாரணமாக எடை போடாதீர்கள். வீணாக விமர்சிக்காதீர்கள். இவ்வாறு ஹைடன் எழுதியுள்ளார்.