» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
செங்கோட்டை அருகே வாலிபர் அடித்துக் கொலை: நண்பர்கள் இருவர் கைது!
செவ்வாய் 21, மார்ச் 2023 10:24:30 AM (IST)
செங்கோட்டை அருகே வாலிபர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அவரது நண்பர்கள் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தென்காசி மாவட்டம் செங்கோட்டையை அடுத்துள்ள கட்டளைகுடியிருப்பு பகுதியில் சுடுகாடு அருகே உடலில் பலத்த காயங்களுடன் ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். இதைப்பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து புளியரை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாம்சன், துணை காவல் கண்காணிப் பாளர் நாகசங்கர், செங்கோட்டை இன்ஸ்பெக்டர் சியாம் சுந்தர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
பிணமாக கிடந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக் காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில் பல்வேறு தகவல்கள் வெளியாகின. பிணமாக கிடந்தவர் செங்கோட்டை அருகே உள்ள கட்டளைகுடியிருப்பு அம்மன் கோவில் மேட்டு தெருவை சேர்ந்த கோமு மகன் அய்யப்பன் (42) என்பதும், கூலித் தொழிலாளியான இவர் தனது குடும்பத்தை பிரிந்து தனியாக வசித்து வந்ததும் தெரியவந்தது.
இவரது நண்பர்கள் அதே ஊரைச் சேர்ந்த பிரபு (43), செண்பகராஜா (27). நேற்று முன்தினம் அதிகாலையில் அய்யப்பன், பிரபுவின் வீட்டின் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்துள்ளார். இதை பார்த்த பிரபு தனது நண்பரான செண்பகராஜாவிடம் தெரிவித்துள்ளார். அன்று இரவில் அய்யப்பனை மதுக் குடிப்பதற்காக பிரபு, செண்பகராஜா ஆகியோர் சுடுகாட்டு பகுதிக்கு அழைத்து சென்றனர்.
அப்போது, அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் அங்கு கிடந்த கம்பு, தென்னை மட்டையால் 2 பேரும் அய்யப்பனை சரமாரியாக அடித்ததாக கூறப்படுகிறது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து பிரபு, செண்பகராஜா ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.