» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பொங்கல் பரிசுத் தொகை ரூ.1000 பெற வங்கிக் கணக்கு கட்டாயம்: தமிழக அரசு
வெள்ளி 2, டிசம்பர் 2022 4:10:44 PM (IST)
பொங்கல் பரிசு தொகை பெற வங்கி கணக்கு கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கிக் கணக்கு இல்லாத ரேஷன் கார்டுதாரர்களுக்கு உடனடியாக கூட்டுறவு வங்கிகளில் கணக்கு தொடங்கி கொடுக்கவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசு சார்பில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையின் போது பச்சரிசி, கரும்பு, முந்திரி பருப்பு, சர்க்கரை, ஏலக்காய், திராட்சை ஆகிய பொருட்களுடன் குறிப்பிட்ட ஒரு தொகையை கொடுத்து வருகிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தவரை பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ 1000 ரொக்கம் கொடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஜெயலலிதா மறைவுக்கு பிறகு முதல்வராக பதவியேற்ற எடப்பாடி பழனிசாமி ரூ 2000 ஆக அதிகரித்து கொடுத்தார்.
இதையடுத்து திமுக அரசு பொறுப்பேற்றவுடன் பொங்கல் பரிசாக 14 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பை கொடுத்தது. இவை தரமற்றதாக இருந்தாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இந்நிலையில் பொங்கல் பரிசு தொகுப்புக்கு பதில் ரொக்கமாக வழங்க முடிவு செய்துள்ளது. அதை ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்குகளில் கொடுக்க முடிவு செய்துள்ளது.
ஆதார் எண் அடிப்படையில் ஆய்வு செய்த போது மொத்தமுள்ள 2.20 கோடி ரேஷன் கார்டுதாரர்களில் 14.60 லட்சம் பேருக்கு வங்கிக் கணக்குகள் இல்லை என தெரியவந்துள்ளது. இவர்களுக்கு உடனடியாக கூட்டுறவு வங்கிகளில் வங்கிக் கணக்கு தொடங்க மண்டல இணை பதிவாளர்களிடம் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம் அண்மையில் தெரிவித்தார்.
இதுகுறித்து சண்முகசுந்தரம் மண்டல இணை பதிவாளர்களுடன் வீடியோ கான்பிரன்ஸில் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் 14.60 லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கும் ஒரு வாரத்திற்குள் கூட்டுறவு வங்கிகளில் கணக்கு தொடங்க உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே வரும் பொங்கல் பண்டிகையின் போது பயனாளிகளுக்கு ரூ 1000 தொகையானது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்றே தெரிகிறது.
இதன் மூலம் மோசடியாக ரூ 1000- த்தை பெறுவதை தடுக்கலாம். சரியான பயனாளிக்கு ரூ 1000 கிடைக்கும் என்று தெரிகிறது. மத்திய அரசின் கேஸ் மானியம், விவசாய உதவித் தொகை உள்ளிட்டவையும் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.