» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தாய்லாந்து நாட்டில் இருந்து விமானத்தில் கடத்தி வந்த 4 குரங்கு குட்டிகள் பறிமுதல்

செவ்வாய் 29, நவம்பர் 2022 10:08:33 AM (IST)



தாய்லாந்தில் இருந்து கடத்தி வந்த 4 அரிய வகை குரங்கு குட்டிகளையும் சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சென்னை மீனம்பக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு தாய்லாந்து நாட்டு தலைநகர் பாங்காக்கில் இருந்து பயணிகள் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை சென்னை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது சென்னையைச் சேர்ந்த முகமது நசிருதீன் என்ற பயணி மீது சுங்க இலாகா அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. 

அவரை நிறுத்தி விசாரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவரது உடைமைகளை சோதனை செய்தனர். அப்போது உடைமைகளை 'ஸ்கேன்' செய்ததில் ஏதோ லேசாக அசைவது போல் தெரிந்தது. இதையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள் அதில் இருந்த பையை திறந்து பாா்த்தனா். அதில் பச்சை நிற கூடை ஒன்றில் 4 அரிய வகை குரங்கு குட்டிகள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இது பற்றி பயணியிடம் விசாரித்தபோது, "அவை அபூர்வ வகை குரங்கு குட்டிகள். இதை வளர்ப்பதற்காக எடுத்து வந்திருக்கிறேன்" என்று கூறினார். ஆனால் விலங்குகளுக்கான எந்த ஆவணங்களும், மருத்துவ பரிசோதனை செய்து நோய் கிருமிகள் ஏதாவது இருக்கிறதா? இல்லையா? என்பதற்கான சான்றிதழ் ஆகியவையும் அவரிடம் இல்லை.

மேலும் சர்வதேச வனவிலங்குகள் பாதுகாப்பு துறையின் தடையில்லா சான்றிதழ் பெற்று இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கு இந்திய வனவிலங்கு துறையிடமும் அனுமதி பெற்று அதற்கான சான்றிதழ்களும் இருக்க வேண்டும். ஆனால் அவரிடம் எந்தவிதமான சான்றிதழ்களும் இல்லாததால் 4 குரங்கு குட்டிகளையும் சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

பின்னர் சென்னையில் உள்ள மத்திய வனவிலங்கு குற்றப்பிரிவு துறை அதிகாரிகள் வந்து பார்த்தபோது அதில் 2 குட்டிகள் இறந்து கிடந்தன. 2 குட்டிகள் மட்டும் உயிருடன் இருந்தன. அதில் உயிருடன் இருந்த 2 குரங்கு குட்டிகளும், உலகிலேயே நீண்ட வாலுடன் கூடிய சிறிய குரங்கு இனமான 'பிக்மி மார்மோசெட்' என்ற வகையை சேர்ந்தவைகள் என தெரியவந்தது. 

இவை தென் அமெரிக்காவின் மேற்கு அமேசான் படுகையில் உள்ள மழைக்காடுகளை பூர்வீகமாக கொண்ட குரங்கினம். பிரேசில், கம்போடியா மற்றும் பெரு நாட்டிலும் காணப்படுகிறது. இறந்து கிடந்த குரங்கு குட்டிகள், மயங்கிய இலை குரங்கு வகையாகும். இவை மலேசியா, பர்மா, தாய்லாந்து, இந்தியாவில் மேற்கு வங்கம், திரிபுரா காடுகளில் காணப்படுகின்றன. பாலூட்டி வகையாகும். உயிருடன் உள்ள மற்ற 2 குரங்கு குட்டிகளையும் மீண்டும் தாய்லாந்து நாட்டுக்கு திருப்பி அனுப்ப முடிவு செய்யப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital







Thoothukudi Business Directory