» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
எனக்கு அமைச்சர் பதவி வழங்குவது குறித்து முதல்வர் முடிவெடுப்பார்: உதயநிதி ஸ்டாலின்
ஞாயிறு 27, நவம்பர் 2022 7:28:06 PM (IST)
எனக்கு அமைச்சர் பதவி வழங்குவது குறித்து முதல்வர் முடிவெடுப்பார் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தனது பிறந்தநாளை முன்னிட்டு தனது தந்தையும், திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின், தாயார் துர்கா ஸ்டாலின் ஆகியோரை நேரில் சந்தித்து ஆசி பெற்றார். அப்போது உதயநிதிக்கு சால்வை அணிவித்து, உச்சி முகர்ந்து அவருக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றார். அப்போது மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் உடன் இருந்தனர்.
தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் நினைவிடத்துக்கு சென்று அஞ்சலி செலுத்தினார். அப்போது அமைச்சர்கள் சேகர் பாபு, கே.ஆர்.பெரிய கருப்பன், வெள்ளக்கோவில் சாமிநாதன், செஞ்சி கே.எஸ்.மஸ்தான், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தயாநிதி மாறன் எம்பி, எம்எல்ஏக்கள் டி.ஆர்.பி.ராஜா, தாயகம் கவி, ஏ.எம்.வி.பிரபாகர் ராஜா, வி.ஜி.ராஜேந்திரன் மற்றும் திண்டுக்கல் ஐ.லியோனி, பகுதி செயலாளர் மதன்மோகன் உள்பட திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மேலும் அவர் கோபாலபுரத்தில் உள்ள கலைஞர் இல்லத்துக்கு சென்று கலைஞர் திருவுருவப்டத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். மேலும் வேப்பேரியில் உள்ள தந்தை பெரியார் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். பிறகு, செய்தியாளர்களிடம் உதயநிதி கூறியபோது, ‘‘மக்களுக்கு பயன்படும் வகையில் தமிழக முதல்வர் செயல்பட்டு வருகிறார். எனக்கு அமைச்சர் பதவி வழங்குவது குறித்து முதல்வர் முடிவெடுப்பார்’’ என்றார்..