» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கள்ளக்காதல் தகராறில் தொழிலதிபர் எரித்துக் கொலை: பெண் உட்பட 2பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை!

சனி 26, நவம்பர் 2022 4:24:47 PM (IST)

கள்ளக்காதல் தகராறில் தொழிலதிபர், கார் டிரைவரை எரித்துக்கொன்ற வழக்கில் பெண் உட்பட 2பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து, திருச்சி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 

திருச்சி கிராப்பட்டியை சேர்ந்தவர் துரைராஜ். தொழிலதிபரான இவர், தனது கார் டிரைவர் சக்திவேலுடன் கடந்த 2007 ஜனவரி 22ம் தேதி திருச்சி மாவட்டம் வையம்பட்டி பகுதியில் காருடன் எரித்து கொலை செய்யப்பட்டார். சிபிசிஐடி போலீசார் நடத்திய விசாரணையில், ஸ்ரீரங்கத்தை சேர்ந்த சாமியார் கண்ணன்(55), அவரது கள்ளக்காதலி யமுனா(52), யமுனாவின் தாய் சீதாலட்சுமி ஆகிய 3 பேருக்கும் இந்த கொலை வழக்கில் தொடர்பு இருந்தது தெரியவந்தது. யமுனாவின் கணவர் தங்கவேல். வைர வியாபாரி. இவர், துரைராஜிடம் கடன் வாங்கி இருந்தார்.

இந்த கடனை திருப்பிக்கேட்டு வந்தார். மேலும், யமுனாவிடம் ஒருதலையாக கள்ளக்காதலும் வைத்திருந்தார். இதனால் இவரை கொலை செய்ய, சாமியார் கண்ணனும், கள்ளக்காதலி யமுனாவும் திட்டமிட்டனர். அதன்படி அவர்கள் துரைராஜையும், அவரது கார் டிரைவரையும் கொலை செய்துள்ளனர். இதற்கு யமுனாவின் தாய், சீதாலட்சுமியும் உடந்தையாக இருந்துள்ளார். இதையடுத்து அவர்கள் 3 பேரும் 3.12.2013ல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். கடந்த 9 வருடங்களாக சிறையில் தண்டனை அனுபவித்து வருகின்றனர். இந்த வழக்கு திருச்சி 2வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இந்நிலையில் வயது முதிர்வு மற்றும் நோய் காரணமாக சில ஆண்டுகளுக்கு முன்பு சீதாலட்சுமி மரணம் அடைந்தார். ஆனால் மற்ற இருவர் மீதும் தொடர்ந்து விசாரணை நடந்து வந்தது. வழக்கு விசாரணையில் 80 பேர் சாட்சியம் அளித்தனர். இரு தரப்பு விவாதம் கடந்த 12ம் தேதி முடிந்த நிலையில், நேற்று இவ்வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது. இதில் சாமியார் கண்ணன் மற்றும் அவரது கள்ளக்காதலி யமுனா ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டு இருப்பதாக கூறி, அவர்கள் இருவருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி ஜெயக்குமார் தீர்ப்பு அளித்தார்.

கள்ளக்காதலுக்காக 3 பேர் கொலை

இரட்டை ஆயுள் தண்டனை பெற்ற சாமியார் கண்ணன், யமுனா ஆகியோருக்கு மேலும் 3 பேரை கொலை செய்த வழக்கு நிலுவையில் உள்ளது. அதாவது கள்ளக்காதலர்களான இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்தனர். இதற்கு யமுனாவின் கணவர் தங்கவேல் இடையூறாக இருந்ததால் அவரை தீர்த்துகட்ட இருவரும் முடிவு செய்தனர். அதன்படி தங்கவேலை கண்ணன் சமயபுரம் அருகே பூஜை செய்வதாக கூறி வரவழைத்து கழுத்தை அறுத்து கொலை செய்தார்.

அதன்பிறகு திருவானைக்காவலில் உள்ள வீட்டில் யமுனா, தனது மகன் செல்வகுமார், மகள் சத்யா, தாய் சீதாலட்சுமி ஆகியோருடன் வசித்து வந்தார். கண்ணன் அவ்வப்போது அவர்களது வீட்டுக்கு வந்துசென்றார். இதை செல்வகுமார் கண்டித்தார். இதனால் செல்வகுமாரை கொலை செய்து பேரலில் அடைத்து துறையூர் பகுதியில் வீசினர். அண்ணன் மாயமானதால் சந்தேகமடைந்த தங்கை சத்யா போலீசில் புகார் கொடுக்க போவதாக கூறியதால் அவரையும் அதே பாணியில் கொலை செய்து வீசினர். இந்த 3 கொலை வழக்கு விசாரணைகளும் 2வது மாவட்ட கூடுதல் அமர்வு கோர்ட்டில் நடந்து வருகிறது.


மக்கள் கருத்து

மனிதன்Nov 26, 2022 - 05:00:08 PM | Posted IP 162.1*****

கள்ளக்காதல் என்று ஒன்று இல்ல. அது கள்ளக் காமம்

TamilanNov 26, 2022 - 04:38:15 PM | Posted IP 162.1*****

ayyooo

தமிழன்Nov 26, 2022 - 04:37:32 PM | Posted IP 162.1*****

aahhh

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital











Thoothukudi Business Directory