» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தென் மாவட்டங்களில் கஞ்சாவை முழுமையாக ஒழிக்க நடவடிக்கை : ஐஜி அஸ்ட்ரா கார்க்
புதன் 23, நவம்பர் 2022 5:20:51 PM (IST)
தென் மாவட்டங்களில் கஞ்சா பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. முழுமையாக ஒழிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது என தென்மண்டல ஐஜி அஸ்ட்ரா கார்க் தெரிவித்தார்.
நெல்லை சரக டிஐஜி பிரவேஷ்குமார் நெல்லை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சரவணன், கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஹரிகிரன் ஆகியோருடன் தென்மண்டல ஐஜி அஸ்ட்ரா கார்க் ஆலோசனை மேற்கொண்டார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறும் போது, நெல்லை மாவட்டத்தில் கடந்த 2021ஆண்டு 188 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர் இந்த 2022 ஆண்டு இதுவரை 204 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நெல்லை மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 958 பேர் வழக்கு பதிவு செய்யப்பட்டு நன்னடத்தைக்கான பிணை பத்திரம் பெறப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு சீவலப்பேரில் நடைபெற்ற கொலை சம்பவத்தில் இதுவரை 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் தகுதியானவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
தென் மாவட்டங்களில் குற்ற செயலில் ஈடுபடுபவர்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். தென் மாவட்டங்களில் கஞ்சா விற்பனையை முழுவதுமாக ஒழிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கஞ்சா ஏற்றுமதியாகும் ஆந்திரா வரை சென்று எதிரிகள் கைது செய்து நடவடிக்கை எடுத்தததுடன் எதிரிகளின் சுமார் 2000 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. சுமார் 15 கோடி மதிப்புள்ள அசையும் மற்றும் அசையா சொத்துக்களும் முடக்கப்பட்டுள்ளன என தெரிவித்தார்.