» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பத்திரிக்கையாளர் நலவாரியமா? முதலாளிகள் நலவாரியமா? முதல்வருக்கு டி.எஸ்.ஆர்.சுபாஷ் கடிதம் !
செவ்வாய் 22, நவம்பர் 2022 1:11:59 PM (IST)
உலகத்திலேயே முதலாளிகளையும், குரலற்றவர்களையும், உழைக்கும் தோழர்களின் வேதனையும், வலியும் உணராத, ஒரு சிறு தொடர்பு கூட இல்லாத ஒரு கூட்டத்தை வைத்து நலவாரியம் அமைத்த பெருமை தமிழகத்திற்கே கிடைக்கும் என்று தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் (டி.யு.ஜே.) மாநில தலைவர் தோழர் டி.எஸ்.ஆர்.சுபாஷ் தமிழக முதல்வருக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளோ, பத்திரிகையாளர்களின் நலனில் தொடர்ந்து போராடி வரும் சங்கத்தின் நேர்மையான நபர்களையோ, மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு அடையாளம் காட்ட கூட ஒரு தகுதிவாய்ந்த அதிகாரியோ, அலுவலர்களோ இல்லாத நிலையில், அரசு எந்த ஒரு அறிவிப்பு அறிவித்தாலும் அது உண்மையில் பயன் உள்ள அறிவிப்பா, அதில் என்ன சிக்கல்கள் உள்ளது, இதில் தளர்வுகள் தேவையா, அல்லது இது பயனே இல்லையா என்று சிந்தித்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் அமைப்புகளும் ஒரு சில அமைப்புகள் மட்டுமே உள்ளன.
மற்ற பெரும்பாலான லெட்டர் பேடு அமைப்புகள் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அது அ.தி.மு.க அல்லது தி.மு.க எது ஆட்சிக்கு வருகிறதோ அந்த ஆளும் ஆட்சியின் மூலம் சொந்த லாபங்களுக்காக அவர்கள் காலில் விழுந்து கிடக்கும் அவல நிலையில் உள்ளது வேதனை நிறைந்த ஒன்றாகும்.
ஓய்வூதியம், குடும்ப நல நிதி, பணிப்பாதுகாப்பு, உயிர் பாதுகாப்பு, பஸ் பாஸ், ஊதியம் போன்ற அடிப்படை தேவைகளுக்கு யாரை எதிர்த்து போராடுகிறோமோ, அதாவது தற்போது நலவாரியத்தில் இணைய வேண்டும் என்றால் நிறுவனம் குறைந்த பட்சம் மூன்று ஆண்டுகள் அவர்கள் பணியில் உள்ளதை கடிதம் மூலம் தர வேண்டும், அதே போல, ஓய்வூதியம் பெற, மறைந்த பின் குடும்ப நல நிதி கிடைக்க, அவர்கள் பணியாற்றிய நிறுவனங்கள் அதற்கான கடிங்களை தர வேண்டும்.
ரிப்போட்டர் என்று கூட பலர் தருவது இல்லை, நியூஸ் காண்ரிபியூட்டர் அல்லது ப்ரீலான்சர் அதாவது சட்டப்படி அதில் அவர்கள் முழு நேர ஊழியர் இல்லை என்பதே அதன் பொருள்.
இதை எதிர்த்து தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் மற்றும் ஒரு சில அமைப்புகள் இரண்டு அரசுகளிடமும் தொடர்ந்து மாறி, மாறி போராடி வருகிறது.
அதுமட்டுமின்றி நலவாரியம் அமைந்தால் அது அனைவருக்கும் பலன் தரும் என்று நலவாரியம் வேண்டும் என்று போராடி வந்தோம்.
ஆனால் முதலாளிகளின் பிரதிநிதிகளும், தமிழகத்தில் எத்தனை தாலுகா செய்தியாளர்கள் உள்ளனர் அவர்களுடைய தேவைகள் என்ன என்பது பற்றி ஒரு சதவீதம் கூட தெரியாத நபர்களை வைத்து ஒரு நலவாரியத்தை அமைத்து இருப்பதும், யாரிடம் நாங்கள் போராடுகிறோமோ, அவர்களையே அரசு பொறுப்பில் வழங்கி "இது ஒரு பத்திரிகையாளர் ஆட்சி " என்று பேசுவது வியப்பை அளிக்கிறது.
தமிழகத்தில் மொத்தம் எத்தனை பத்திரிகையாளர்கள் போராட்ட களத்தில், நிர்வாகத்தின் அங்கீகாரம் இல்லாமல் வேலை செய்து வருகிறார்கள் என்று இந்த அரசுக்கு தெரியுமா?
அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி துணை மக்கள் தொடர்பாளர் மற்றும் மக்கள் தொடர்பாளர் போன்ற பதவிகளுக்கு வரும் சிலர் எப்படியெல்லாம் செய்தியாளர்களை உதாசீனம் செய்து வருகின்றனர் என்பது இந்த அரசுக்கு தெரியுமா?
அமைச்சர் உறவினர், உதயநிதி ஸ்டாலின் அவர்களின் நன்பருடைய நன்பருக்கு தெரிந்தவர் என்று எல்லாம் சொல்லிக் கொண்டு திரியும் ஏ.பி.ஆர். ஓ.,க்களின் அராஜகங்கள் பற்றி இந்த அரசுக்கு தெரியுமா?
40 வருடங்களுக்கு மேல் பணியாற்றிய, அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர், போன்றவர்கள் காலத்தில் அவர்களுடன் பணியாற்றி மறைந்த எத்தனை பேர் குடும்பங்கள் அரசின் குடும்ப நல நிதியோ, சலுகை வீடுகளோ எதுவுமே இல்லாமல் கஷ்டப்பட்டுக் கோண்டு உள்ளனர் என்று இந்த அரசுக்கு தெரியுமா?
காட்சி ஊடகங்களில் உள்ளவர்கள் எத்தனை பேர், அச்சு ஊடகங்களில் உள்ளவர்கள் எத்தனை பேர், சுயமரியாதை கொண்டு, தனியாக கஷ்டப்பட்டு மாத, வார இதழ்களை நடத்தி வந்தவர்களில் மறைந்து போனவர்கள் யார் யார் என்ற தகவல் நலவாரியத்தில் இருக்கும் முதலாளிகளுக்கு தெரியுமா?
ஒட்டுமொத்தமாக 5% முதல் 15 % வரை மட்டுமே அரசின் பலன்களும், திட்டங்களும் கிடைத்து வரும் நிலையில் தொழிற்சங்க அமைப்புகள், அதன் பிரதிநிதிகள் ஆகியோரை இணைத்து கொண்டு செயல்பட கூட இந்த அரசு முன்வரவில்லை.
அரசின் அடையள அட்டை வழங்குவது உட்பட எல்லாவற்றிலும் குளறுபடிகள், எனவே மாண்புமிகு தமிழக முதல்வர் பத்திரிகையாளர்களின் நலன் மற்றும் தேவைகளைப் பற்றி தெரிந்த, உணர்ந்து செயல்படுகின்றவர்களை கொண்டு நலவாரியம் உட்பட அனைத்து உதவிகளையும் பாதிக்கப்பட்ட பத்திரிகையாளர்களுக்கு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பில் மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.
WebmasterNov 22, 2022 - 01:26:55 PM | Posted IP 162.1*****