» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
விவேகானந்த கேந்திராவில் ராமானுஜர் சிலை : பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்!
செவ்வாய் 22, நவம்பர் 2022 12:14:08 PM (IST)
கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திராவில் நிறுவப்பட்டுள்ள ராமானுஜர் முழு உருவ சிலையை வருகிற 25ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலம் திறந்து வைக்கிறார்.
கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்தா கேந்திர வளாகத்தில் அமைந்து உள்ள சபா மண்டபத்தில் ஸ்ரீ ராமானுஜ சாம்ராஜ்ய மகோத்சவம் நிகழ்ச்சி வருகிற 24-ம் தேதி தொடங்கி 25-ம் தேதி வரை 2 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது. 24-ம் தேதி காலை 10 மணிக்கு தமிழக கவர்னர் ஆர். என். ரவி நிகழ்ச்சியை தொடங்கி வைக்கிறார். மேல்கோட்டை ஸ்ரீயதுகிரி யதிராஜமடம் 41-வது பட்டம் பீடாதிபதிஸ்ரீ ஸ்ரீயதுகிரியதிராஜ நாராயண ராமானுஜ ஜீயர் சுவாமிகள் முன்னிலை வகிக்கிறார்.
இதில் சிறப்பு விருந்தினராக கர்நாடக மாநில மந்திரி அஸ்வத் நாராயண், விஜய்வசந்த் எம்.பி., தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ., கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திர தலைவர் பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு பேசுகிறார்கள். மாலை 6மணிக்கு சுவாமி ராமானுஜர் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் பகவத் ராமானுஜர் நாட்டிய நாடக நிகழ்ச்சி நடக்கிறது. 25-ம் தேதி காலை 10 மணிக்கு ராமானுஜர் மாநாடு நடக்கிறது. பகல் 12 மணிக்கு விவேகானந்தா கேந்திராவில் நிறுவப்பட்டு உள்ள ராமானுஜர் முழு உருவ சிலை திறப்பு விழா நடக்கிறது. இந்த முழு உருவ சிலையை பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலம் திறந்து வைக்கிறார்.