» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
மங்களூரு குண்டு வெடிப்பு: நாகர்கோவில் இளைஞரிடம் விசாரணை
செவ்வாய் 22, நவம்பர் 2022 12:10:07 PM (IST)
மங்களூருவில் நடந்த குக்கர் குண்டு வெடித்த சம்பவம் தொடர்பாக நாகர்கோவிலைச் சேர்ந்த இளைஞரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
கர்நாடக மாநிலம், மங்களூருவில் கடந்த சனிக்கிழமை ஆட்டோ ஒன்றில் குக்கர் குண்டு வெடித்தது. இதில் ஆட்டோவில் இருந்த பயணி மற்றும் ஓட்டுநர் காயமடைந்தனர். இந்த சம்பவம் பயங்கரவாத தாக்குதல் சம்பவம் என்று கர்நாடக மாநில காவல்துறை அறிவித்துள்ளது.
குக்கர் குண்டு வெடிப்பு சம்பவத்தில், தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் கம்பளம் பகுதியில் விடுதியில் தங்கி இருந்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த அஜீம்ரகுமான் என்ற இளைஞரை கோட்டாறு காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து போலீஸார் விசாரணை நடத்தினர். இதனால் குமரி மாவட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
ஆட்டோவில் குண்டுவெடித்து காயமடைந்த ஒருவருடன் அஜீம் ரகுமான் செல்போனில் பேசியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து இந்த விசாரணை நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. அவரது கைப்பேசியில் இருந்து சென்ற அழைப்புகள் மற்றும் கைப்பேசிக்கு வந்த அழைப்புகள் குறித்து தீவிரமாக விசாரித்தனர். கோட்டாறு காவல்நிலையத்தில் சுமார் 30 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், குண்டுவெடிப்பில், அஜீம்ரகுமானுக்கு தொடர்பில்லை என்பது தெரியவந்துள்ளது.