» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
குமரி மாவட்டத்தில் தொடரும் சூறைக்காற்று: மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை
சனி 2, ஜூலை 2022 5:38:04 PM (IST)
கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து வீசும் சூறைக்காற்றால் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் சில நாட்களாக காற்றின் வேகம் அதிகமாக உள்ளது. அதிகாலையில் சூறாவளியாக காற்று வீசுகிறது. கடலில் மிக உயரமாக அலை எழும்புகிறது. இதனால் விவேகானந்தர் பாறைக்கு படகு போக்குவரத்து துவங்குவதில் தினமும் தாமதம் ஏற்படுவதுடன் அடிக்கடி நிறுத்தியும் வைக்கப்படுகிறது.
சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று முன்தினம் அதிகாலையில் புறப்பட்டு சென்ற 350 படகுகள் சிறிது நேரத்திலேயே கரை திரும்பின. நேற்றும் படகுகள் செல்லவில்லை. சிறிய நாட்டு படகுகள் மற்றும் வள்ளம் கரையில் பாதுகாப்பாக கட்டி போடப்பட்டுள்ளன. காற்றின் வேகம் தொடர்ந்து அதிகமாக உள்ளதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். சில நாட்களாக மீன்வரத்து இல்லாததால் சந்தைகள் வெறிசோடின.