» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கோயில் வருமானத்தை முறையாக வசூலித்தால் பற்றாக்குறை இல்லாத பட்ஜெட்: உயர் நீதிமன்றம்
சனி 2, ஜூலை 2022 12:05:10 PM (IST)
இந்து சமய அறநிலையத்துறை கோயில்களுக்கு சொந்தமான சொத்துகள் மூலம் வருகின்ற வருவாயை முறையாக வசூலித்தால், தமிழக அரசால் பற்றாக்குறை இல்லாத பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடியும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கோயில் சிலைகள் மற்றும் நகைகள் பாதுகாப்பு தொடர்பாக உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்த வழக்கில் 75க்கும் மேற்பட்ட வழிகாட்டுதல்களை வழங்கி உத்தரவிட்டுள்ளது. அவற்றில் 38 உத்தரவுகளை அமல்படுத்தி விட்டதாகவும், 5 உத்தரவுகள் மாநில அரசு தொடர்பில்லாதது என்றும், 32 உத்தரவுகளில் மறு ஆய்வு செய்ய வேண்டுமென்றும் தமிழக அரசு தரப்பில் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், கோயில் நிலங்கள் மீட்பதில் சுணக்கம் ஏற்படக்கூடாது. ஆக்கிரமிப்பாளர்கள் இருந்தால் உடனடியாக வெளியேற்றவும், கட்டிடங்களை பூட்டி சீல் வைக்கவும், தர மறுத்தால் அவர்களின் தனிப்பட்ட சொத்துகளை முடக்கவும் அறநிலையத்துறைக்கு அதிகாரம் உள்ளது.
அங்கீகரிக்கப்படாத குத்தகைகள் இருந்தால் அவற்றை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். உடந்தையாக உள்ள அதிகாரிகளுக்கு எதிராக புகார்கள் வருகிறது. அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறநிலையத் துறைக்கு உத்தரவிட்டனர்.மேலும், அறநிலையத் துறை கோயில்களுக்கு சொந்தமான சொத்துகள் மூலம் வருகின்ற வருவாயை முறையாக வசூலித்தால், தமிழக அரசால் பற்றாக்குறை இல்லாத பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடியும் என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்து விசாரணையை மூன்று வாரங்ளுக்கு தள்ளிவைத்தனர்.
TAMILANJul 5, 2022 - 04:43:39 PM | Posted IP 162.1*****