» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
மனிதாபிமான அடிப்படையில் பேரறிவாளன் விடுதலை : அமைச்சர் மனோதங்கராஜ் வரவேற்பு
புதன் 18, மே 2022 5:38:04 PM (IST)
மனிதாபிமானத்தின் அடிப்படையில் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டது வரவேற்கத்தக்கது என அமைச்சர் மனோதங்கராஜ் கூறினார்.
குமரி மாவட்டத்தை சேர்ந்த மறைசாட்சி தேவ சகாயத்துக்கு வாடி கனில் புனிதர் பட்டம் வழங்கப்பட்டது. இந்த விழாவில் தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் மனோ தங்கராஜ், மஸ்தான் ஆகியோர் பங்கேற்றனர். இந்த நிலையில் அமைச்சர் மனோ தங்கராஜ் இன்று குமரி மாவட்டம் வந்தார். நட்டாலத்தில் உள்ள மறைசாட்சி தேவ சகாயம் வீட்டிற்கு சென்ற அவர் அங்கு உள்ள அவரது சிலைக்கு மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி யளித்தார்.
அப்போது கூறியதாவது: தமிழகத்தில் குறிப்பாக குமரி மாவட்டம் நட்டாலத்தில் வாழ்ந்த 18-ம் நூற்றாண்டைச் சேர்ந்த மறை சாட்சி தேவசகாயத்திற்கு வாடிகனில் போப் ஆண்ட வர் மூலம் புனிதர் பட்டம் வழங்கப்பட்டது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. இதற்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இது வரலாற்று சிறப்புமிக்க புனிதமான நிகழ்வு ஆகும். இந்த நிகழ்வுக்கு செல்வதற்கான வாய்ப்பை கொடுத்த தமிழக முதல்-அமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
மறைசாட்சி தேவசகாயம் இந்த பகுதியில் பிறந்து சமூக நீதிக்காகவும், சமத்து வத்துக்காகவும், சாதிய ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராகவும் போராடினார். மேலும் அவர் அன்றைய கால மன்னர்களால் பல இன்னல்களுக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். அந்த மாமனிதருக்கு தற்போது மிகப்பெரிய அங்கீகாரம் கிடைத்துள்ளது.
பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டது வரவேற்கத்தக்கது. பேரறிவாளன் விடுதலைக்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு முயற்சிகளை செய்தார். மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்தார். இந்த நிலையில் தற்போது அவருக்கு நீதிமன்றம் விடுதலை கொடுத்துள்ளது. மனிதாபிமானத்தின் அடிப்படையில் அவருக்கு விடுதலை கிடைத்துள்ளது. சிறையில் இருந்த கால கட்டத்தில் அவர் நற்பெயர் பெற்றுள்ளார். இப்படி பல்வேறு அம்சங்களை கருத்தில் கொண்டுதான் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.