» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பேரறிவாளன் வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பை பாஜக ஏற்றுக் கொள்கிறது : அண்ணாமலை கருத்து!
புதன் 18, மே 2022 12:30:07 PM (IST)
பேரறிவாளன் வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை தமிழக பாஜக ஏற்றுக் கொள்வதாக மாநில தலைவர் கே. அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தன்னை விடுதலை செய்யக் கோரி பேரறிவாளன் தொடர்ந்த வழக்கை விசாரித்து வந்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி விடுதலை செய்வதாக தீர்ப்பளித்தனர்.
இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாவது: "பேரறிவாளனை உச்ச நீதிமன்றம், அரசியல் அமைப்புச் சட்டம் 142-ன் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி விடுதலை செய்திருக்கும் தீர்ப்பை தமிழக பாஜக ஏற்றுக் கொள்கிறது. நம் ஒற்றுமையும், பாதுகாப்பையும், ஒருமைப்பாட்டையும் சமரசம் செய்வதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதிக்காது என்றும் நம்புகின்றோம்” எனத் தெரிவித்துள்ளார்.