» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ஊஞ்சல் கயிறு கழுத்தை இறுக்கி பள்ளி மாணவன் பலி : பாவூர்சத்திரத்தில் பரிதாபம்!
வெள்ளி 13, மே 2022 10:32:01 AM (IST)
பாவூர்சத்திரம் அருகே ஊஞ்சல் விளையாடியபோது கயிறு கழுத்தை இறுக்கி பள்ளி மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
பாவூர்சத்திரம் அருகே திப்பணம்பட்டியைச் சேர்ந்தவர் முருகேசன். இவர் பாவூர்சத்திரம் ரெயில்வே கேட் அருகில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மகன் அஸ்வந்த் சச்சின் (12). பாவூர்சத்திரத்தில் உள்ள தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான். பள்ளி விடுமுறை என்பதால் மதியம் வீட்டின் பின்புறத்தில் மரத்தில் கயிற்றில் கட்டப்பட்டிருந்த ஊஞ்சலில் ஏறி விளையாடினான்.
அப்போது எதிர்பாராதவிதமாக கயிறு, அஸ்வந்த் சச்சினின் கழுத்தில் மாட்டிக்கொண்டது. இதனால் கயிறு இறுக்கியதில் மூச்சுத்திணறி சம்பவ இடத்தில் அஸ்வந்த் சச்சின் பரிதாபமாக உயரிழந்தான். தகவல் அறிந்ததும் பாவூர்சத்திரம் போலீசார் விரைந்து சென்றனர். மாணவன் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக தென்காசி அரசு
மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்