» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை : போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
திங்கள் 9, மே 2022 10:38:32 AM (IST)
மார்த்தாண்டம் அருகே 2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
குமரி மாவட்டம், மார்த்தாண்டம் அருகே உள்ள காப்புக்காடு பகுதியை சேர்ந்தவர் அஸ்வின் (30). இவர் நேற்று முன்தினம் மதியம் ஒரு வீட்டுக்குள் நாய் குட்டியுடன் சென்று அந்த வீட்டில் இருந்த 4 வயது சிறுமி மற்றும் 8 வயது சிறுமிகளிடம் நாயை வைத்து விளையாட்டு காட்டுவது போல் நடித்து, 2 சிறுமிகளுக்கு அஸ்வின் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் அஸ்வின் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
அதே சமயத்தில் மார்த்தாண்டம் போலீசில் அஸ்வின் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:- நான் சம்பவத்தன்று காலையில் வேலைக்கு செல்லும்போது அந்த பகுதியில் 4 வயது சிறுமி விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது அந்த சிறுமியை தூக்கி முத்தம் கொடுத்து விட்டு சென்றேன். மாலையில் திரும்பி வரும்போது அந்த சிறுமியின் தந்தை மற்றும் மோகன்தாஸ், அருண் ஆகிய 3 பேரும் ‘குழந்தையை என்ன செய்தாய்’ என்று கேட்டு தாக்கி என்னை மரத்தில் கட்டி வைத்தனர்.
தான் அலறவே பக்கத்தில் உள்ளவர்கள் என்னை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. அந்த புகாரின் அடிப்படையில் மோகன்தாஸ், அருண் உள்பட 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.