» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தமிழகத்தில் ஜன.23ம் தேதி முழு ஊரடங்கு அமல்: ஆட்டோக்கள் இயக்க அனுமதி!
வெள்ளி 21, ஜனவரி 2022 4:04:16 PM (IST)
தமிழகத்தில் ஜன.23ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும். அனைத்து ரயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்களில் வழக்கமான ஆட்டோக்கள் இயக்கப்படும் என்று என தமிழக அரசு அறிவித்துள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அன்று செயல்படுத்தப்பட்ட அனைத்துக் கட்டுப்பாடுகளும் ஜனவரி 23ஆம் தேதி முழு ஊரடங்கின் போதும் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இது குறித்து அறிக்கையில்,தமிழ்நாட்டில் கரோனா நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த 23-1-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தமிழ்நாட்டில், கரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் அரசு ஆணை எண்.30 வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, நாள் 12-1-2022-ன்படி, கடந்த 16-1-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டது.
தற்போது தமிழ்நாட்டில் கரோனா – ஒமைக்ரான் வைரஸ் நோய்த் தொற்று பரவல் அதிகரித்து வரும் சூழ்நிலையில், பொது மக்கள் நலன் கருதி தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் எதிர்வரும் 23-1-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும்.
இந்த முழு ஊரடங்கு நாளில் கடந்த 16-1-2022 (ஞாயிற்றுக்கிழமை) அன்று முழு ஊரடங்கின் போது நடைமுறைப்படுத்தப்பட்ட அதே அத்தியாவசிய செயல்பாடுகள் அனுமதிக்கப்படும்; தடை செய்யப்பட்ட செயல்பாடுகளுக்கான தடைகள் தொடரும்.
மேலும், வெளியூர்களிலிருந்து வரும் பயணிகளின் நலன் கருதி, சென்னை சென்ட்ரல், எழும்பூர் இரயில் நிலையங்கள் மற்றும் கோயம்பேடு பேருந்து நிலையம் போன்ற இடங்களில் வழக்கமான ஆட்டோக்கள், செயலி மூலம் முன்பதிவு செய்து இயக்கப்படும் வாடகை கார்கள் பயணிகளை ஏற்றிச் செல்ல அனுமதிக்கப்படும். மாவட்ட இரயில் நிலையங்களுக்கும் மற்றும் வெளியூர் பேருந்து நிலையங்களுக்கும் இது பொருந்தும். கரோனா தொற்றிலிருந்து மக்களைக் காத்திட அரசு மேற்கொள்ளும் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு முதல்வர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசீர். விJan 21, 2022 - 04:53:53 PM | Posted IP 162.1*****