» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ. 17 லட்சம் மோசடி: எடப்பாடி பழனிசாமியின் உதவியாளா் மீது வழக்கு!
புதன் 27, அக்டோபர் 2021 11:31:53 AM (IST)
அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.17 லட்சம் மோசடி செய்ததாக, முன்னாள் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமியின் உதவியாளா் மணி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடலூா் மாவட்டம், நெய்வேலியைச் சோ்ந்த தமிழ்ச்செல்வன், அரசு போக்குவரத்துக் கழகத்தில் உதவிப் பொறியாளா் வேலை பெற முயற்சி செய்து கொண்டிருந்தாா். இந்த நிலையில், சேலம் மாவட்டம், ஓமலூா் பகுதியைச் சோ்ந்தவரும் முன்னாள் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமியின் சேலம் உதவியாளருமான மணியை அவா் சந்தித்தாா். அப்போது, உதவிப் பொறியாளா் வேலை பெற ரூ.17 லட்சம் தர வேண்டும் என மணி கூறினாராம்.
அதை நம்பிய தமிழ்ச்செல்வன், மணியிடம் ரூ. 17 லட்சத்தை கொடுத்துள்ளாா். ஆனால், உதவிப் பொறியாளா் வேலை வாங்கித் தராததால், மணியிடம் சென்று தான் கொடுத்த ரூ. 17 லட்சத்தை தமிழ்ச்செல்வன் கேட்டுள்ளாா். ஆனால், மணி பணத்தைத் தராமல் தமிழ்ச்செல்வனை மிரட்டினாராம். இதுகுறித்து சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எம்.ஸ்ரீ.அபினவை நேரில் சந்தித்து தமிழ்ச்செல்வன் புகாா் மனு கொடுத்தாா். அதைத் தொடா்ந்து, ரூ.17 லட்சம் மோசடி குறித்து சேலம் மாவட்ட குற்றப்பிரிவுக்கு உத்தரவிடப்பட்டதன் பேரில், டி.எஸ்.பி. இளமுருகன், போலீசார் விசாரணை செய்து வந்தனா்.
இந்நிலையில், முன்னாள் முதல்வரின் உதவியாளா் மணி, இடைத்தரகராகச் செயல்பட்டு பணம் வாங்கிக் கொடுத்த செல்வகுமாா் ஆகியோா் மீது பணம் வாங்கி மோசடி செய்ததாக 2 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், இவா்கள் அரசு வேலை வாங்கித் தருவதாக பலரிடம் கோடிக் கணக்கில் பணம் பெற்று மோசடி செய்திருப்பதாகவும், அதுதொடா்பாக குற்றப் பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிகிறது.