» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
திருமணமான 3 ஆண்டுகளில் இளம்பெண் தற்கொலை : கோட்டாட்சியர் விசாரணை
புதன் 27, அக்டோபர் 2021 10:16:58 AM (IST)
கடையம் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதையடுத்து தென்காசி கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.
தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள மேட்டூர் ஊரைச் சேர்ந்தவர் பால்துரை. இவரது மகள் கவிதா (28). இவருக்கும், திப்பணம்பட்டி பூவரசன் கோவில் தெருவைச் சேர்ந்த செல்வன் என்பவருக்கும் திருமணம் முடிந்து 3 ஆண்டுகள் ஆகிறது. செல்வன் கட்டுமான தொழில் செய்து வருகிறார். இவர்களுக்கு 1½ வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது. இந்த நிலையில் செல்வனுக்கும், கவிதாவுக்கும் இடையே குடும்ப பிரச்சினை இருந்து வந்தது.
இந்நிலையில் நேற்று கவிதா வீட்டில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கவிதாவின் தந்தை பால்துரை, தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி பாவூர்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கவிதாவின் உடல் தென்காசி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கவிதாவுக்கு திருமணம் முடிந்து 3 ஆண்டுகள் தான் ஆகிறது என்பதால், தென்காசி கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார் .