» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
வாணியம்பாடி மஜக நிர்வாகி படுகொலை விவகாரம்: இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்!
திங்கள் 13, செப்டம்பர் 2021 11:14:47 AM (IST)
வாணியம்பாடி மஜக நிர்வாகி படுகொலை விவகாரத்தில் ஆயுதங்களை வைத்திருந்த குற்றவாளிகளை கைது செய்ய தவறியதாக காவல் ஆய்வாளர் கோவிந்தசாமி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஜீவா நகரில் வசித்து வந்தவர் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில துணைச் செயலாளர் வசீம் அக்ரம். இவர் கடந்த 11 ஆம் தேதி அருகில் உள்ள பள்ளிவாசலில் தொழுகையை முடித்துவிட்டு தனது மகனுடன் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது காரில் வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் வசீமை சரமாரியாக வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பியோடியது. இதனால் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் வாணியம்பாடி பேருந்து நிலையத்தில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். பேருந்து நிலையம், மலங்கு சாலை ஆகிய பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டன.
இந்த சம்பவம் குறித்து வேலூர் டிஐஜி பாபு, வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் (பொறுப்பு) ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ஜீவா நகரில் வசித்து வரும் இம்தியாஸ், அப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வருவதாக வசீம் அக்ரம், காவல் துறைக்கு தகவல் கொடுத்ததால் முன்விரோதம் காரணமாக இம்தியாஸ் கூலிப்படையை வைத்து வசீமை கொலை செய்துள்ளார். இதையடுத்து கொலை செய்துவிட்டு தப்பியோடிய ஓட்டேரி வண்டலூர் பகுதியைச் சேர்ந்த பிரசாந்த் (எ) ரவி, டில்லி குமார் ஆகிய 2 பேரை காஞ்சிபுரம் பாலுசெட்டிசத்திரம் காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர்.
இந்த கொலை சம்பவத்திற்கு பலர் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் 26ம் தேதி முன்னாள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி தலைமையில் ஜீவா நகர் பகுதியில் இம்தியாஸின் கிடங்கில் 10 பட்டாக்கத்திகள்,10 செல்போன், 8 கிலோ கஞ்சா பறிமுதல் செய்து 3 பேர் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள டீல் இம்தியாஸ் உட்பட 2 பேர் கைது செய்யாததால்தான் அவர்கள் முன்விரோதத்தால் மஜக நிர்வாகியை படுகொலை செய்தார். இதனால் நகர காவல் ஆய்வாளர் கோவிந்தசாமியை பணி இடை நீக்கம் செய்து, வேலூர் சரக டிஐஜி ஏ சி பாபு உத்தரவு பிறப்பித்துள்ளார்.