» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜய பாஸ்கர் மீது சொத்துக் குவிப்பு வழக்குப் பதிவு
வியாழன் 22, ஜூலை 2021 11:35:27 AM (IST)
அதிகமுவைச் சேர்ந்த முன்னாள் போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது மத்திய வருமான வரித்துறை சொத்துக் குவிப்பு வழக்குப் பதிவு செய்துள்ளது.
கரூர் ஆண்டாங்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் எம்.ஆர். விஜயபாஸ்கர்(53). அதிமுக மாவட்டச் செயலாளராக இருக்கும் இவர் அதிமுக ஆட்சியில் 2015 முதல் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர். அமைச்சராக இருந்தபோது வாகனங்களுக்கு வேகக்கட்டுப்பாட்டு கருவி டெண்டரை விடுவதில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் கோடிக்கணக்கில் வருமானத்திற்கு அதிகமான சொத்துக்களை வாங்கி குவித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில், அதிமுக ஆட்சியில் போக்குவரத்து கழகங்களில் ஏற்பட்ட இழப்பீடு, ஊழல் தொடர்பாக மத்திய வருமான வரித்துறை அதிகாரிகள் வியாழக்கிழமை அதிகாலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். கரூர் மாவட்டத்தில் உள்ள அவரது சாயப்பட்டறைகள், நிதிநிறுவனங்கள் உள்ளிட்ட 20 இடங்களிலும், சென்னையில் உள்ள அவரது வீடுகளிலும் சோதனைகள் நடைபெற்று வருகின்றனர். சோதனையில் 20-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
சோதனைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், எம்.ஆர். விஜயபாஸ்கர் அமைச்சராக இருந்த காலக்கட்டத்தில் வருமானத்துக்கு மீறி சொத்துக்களை சேர்த்ததாக அவர் மீது சொத்துக்குவிப்பு வழக்கை பதிவு செய்துள்ளது மத்திய வருமான வரித்துறை.