» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கிணற்றில் தவறி விழுந்த இளம் பெண் உயிருடன் மீட்பு
புதன் 21, ஜூலை 2021 12:50:57 PM (IST)
சிவகிரி அருகே இரவில் கிணற்றில் தவறி விழுந்த இளம்பெண்ணை தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டனர்.
தென்காசி மாவட்டம் சிவகிரி அருகேயுள்ள வெள்ளானைக் கோட்டை விலக்கு பதியில் உள்ள தனியார் கிணற்றில் இரவு அப்பகுதியைச் சேர்ந்த முனீஸ்வரி (23) என்ற இளம்பெண் தவறி விழுந்துவிட்டார். அவர் கிணற்றில் தண்ணீரில் நீந்தியபடியே காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என சத்தம் போட்டுள்ளார். இதனைக் கேட்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று பார்;த்த போது கிணற்றிற்குள் முனீஸ்வரி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து வாசுதேவநல்லூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. நிலைய அலுவலர் சேக்அப்துல்லா தலைமையில் தீயணைப்பு வீரர்கள் மாடசாமி ராஜா, மணிவண்ணன், சிவகுமார் ஆகியோர் விரைந்து சென்று கயிறு கட்டி முனீஸ்வரியை கிணற்றில் இருந்து உயிருடன் மீட்டனர். மீட்கப்பட்ட இளம்பெண் முனீஸ்வரி சிகிச்சைக்காக புளியங்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கிணற்றிற்குள் விழுந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த முனீஸ்வரியை உயிருடன் மீட்ட வாசுதேவநல்லூர் தீயணைப்பு வீரர்களை பொதுமக்கள் பாராட்டினர்.