» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பக்ரீத் திருநாள் : இஸ்லாமிய மக்களுக்கு ஓபிஎஸ் – எடப்பாடி பழனிசாமி வாழ்த்து!
செவ்வாய் 20, ஜூலை 2021 5:37:52 PM (IST)
பக்ரீத் திருநாளை கொண்டாடும் இஸ்லாமிய மக்களுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
அவர்கள் கூட்டாக வெளியிட்ட "பக்ரீத்" திருநாள் வாழ்த்து செய்தி வருமாறு: இஸ்லாமியப் பெருமக்கள் இறை நினைவோடும், தியாகச் சிந்தனையோடும் பக்ரீத் திருநாளைக் கொண்டாடி மகிழும் இந்த இனிய நாளில், (21-7-2021) எங்களது உளங்கனிந்த "பக்ரீத்” நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம்.
இறைவனின் கட்டளையை ஏற்று, தனது ஒரே மகனான இஸ்மாயிலை பலியிடத் துணிந்த இறைத் தூதர் இப்ராஹிம் அவர்களின் தன்னலமற்ற தியாகத்தினை உலகுக்கு உணர்த்தும் உன்னத நாள் பக்ரீத் திருநாளாகும். இறைவனின் விருப்பத்திற்கு கீழ்ப்படிந்து வாழ்வதே சிறந்த வாழ்க்கை நெறி என்று உலகிற்கு பறைசாற்றும் பொன்னாள் இந்நாளாகும்.
இத்தியாகத் திருநாளில் பசித்தவர்களுக்கு உணவளியுங்கள்; துன்பப்படுபவர்களுக்கு உதவி புரியுங்கள்; அண்டை அயலாரிடம் அன்பாக இருங்கள்; எளியவர்களிடம் கருணை காட்டுங்கள்; சிந்தனையிலும், நடத்தையிலும் தூய்மை உடையவராக இருங்கள் என்ற நபிகள் நாயகம் அவர்களின் போதனைகளை மக்கள் அனைவரும் மனதில் நிறுத்தி வாழ்ந்தால், உலகில் அமைதி நிலவி, வளம் பெருகும்.
விட்டுக்கொடுத்தலும், ஈகை புரிதலும், மத நல்லிணக்கமும், மனித நேயமும் தழைத்தோங்க வேண்டும்; அனைவர் வாழ்விலும் வளமும், நலமும் பெருகிட வேண்டும் என்ற எங்களுடைய விருப்பத்தினைத் தெரிவித்து, இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது வழியில், எங்களது "பக்ரீத்'' திருநாள் நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறோம். இவ்வாறு, பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துகளை ஓபிஎஸ் – இபிஎஸ் தெரிவித்துள்ளனர்.