» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தமிழில் பதவி பிரமாணம் ஏற்றுக்கொண்ட விஜய் வசந்த்.. ராகுல் காந்தி வாழ்த்து!
திங்கள் 19, ஜூலை 2021 5:42:20 PM (IST)
நாடாளுமன்றத்தில் குமரி மக்களவைத் தொகுதி உறுப்பினராக காங்கிரஸ் கட்சியின் விஜய் வசந்த் இன்று தமிழில் பதவி பிரமாணம் ஏற்று பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
காங்கிரசின் மூத்த தலைவராகவும் கன்னியாகுமரி தொகுதியில் மக்களவைத் தொகுதி எம்பி ஆகவும் இருந்த வசந்தகுமார், கொரோனா நோய் தாக்கம் காரணமாக கடந்த வருடம் மரணமடைந்தார். இதைத்தொடர்ந்து இந்த வருடம் தமிழக சட்டசபைக்கு தேர்தல் நடைபெற்ற காலகட்டத்தில் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கு தேர்தல் நடைபெற்றது. அதில், வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் போட்டியிட்டு பாஜக வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணனைவிட ஒரு லட்சத்து 34 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இந்நிலையில் இன்று அவர் நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடரில் பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டார். அவர் தமிழில் உறுதிமொழி எடுத்துக் கொண்டார். கன்னியாகுமரி மக்களவை தொகுதி உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட, ஹரிகிருஷ்ண பெருமாள் நாடார் வசந்தகுமாரின் மகனாகிய விஜயகுமார் என்கிற விஜய் வசந்த் என்னும் நான், சட்டப்பூர்வமாக நிறுவப்பட்டுள்ள இந்திய அரசமைப்பின்பால் உண்மையான நம்பிக்கையும், பற்றுதலும் கொண்டிருப்பேன் என்றும், இந்திய நாட்டின் இறையாண்மையையும் ஒருமைப்பாட்டையும் நிலைநிறுத்துவேன் என்றும், நான் மேற்கொள்ள உள்ள கடமையை நேர்மையுடன் நிறைவேற்றுவேன் என்றும் கடவுள் அறிய உறுதி கூறுகிறேன். பெருந்தலைவர் காமராஜர் புகழ் வாழ்க, ராஜீவ் காந்தி புகழ் வாழ்க என்று அவர் உறுதி மொழி எடுத்துக் கொண்டார்.
விஜய் வசந்த், காமராஜர் பெயரையும், ராஜீவ் காந்தி பெயரையும் கைகளை ஓங்கியபடி உச்சரித்தார். பின்னர் அவர் காங்கிரஸ் மூத்த தலைவரும் எம்பியுமான ராகுல் காந்தியை பாராளுமன்ற வளாகத்தில் வைத்து சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது தனது தந்தை எழுதிய புத்தகங்களை அன்பளிப்பாக ராகுல்காந்திக்கு பரிசளித்தார்.
ARIVUJul 20, 2021 - 01:16:39 PM | Posted IP 173.2*****