» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ஒலிம்பிக் போட்டியில் தமிழக வீரர்கள் அனைவரும் பதக்கத்துடன் வரவேண்டும்: முதல்வர் வாழ்த்து
சனி 17, ஜூலை 2021 12:26:42 PM (IST)
ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ளும் தமிழக வீரர்கள் அனைவரும் பதக்கத்துடன் வரவேண்டும் என முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஜப்பான் நாட்டின், டோக்கியோ நகரில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளவுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுடன் மு.க.ஸ்டாலின் முகாம் அலுவலகத்தில், காணொலிக் காட்சி மூலமாக உரையாற்றினார். அதில், உலகின் மிகப்பெரிய விளையாட்டுப் போட்டியில் நீங்கள் கலந்துகொள்ள இருக்கிறீர்கள் என்பதை நினைக்கும்போதே உங்களுக்கு எத்தகையபெருமை இருக்கிறதோ - அதேபோல் எனக்கும் பெருமையாக இருக்கிறது.
நீங்கள் அனைவரும் வெற்றி பெற்று பதக்கங்களோடுதான் தமிழ்நாட்டுக்கு வருவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு நிறையவே இருக்கிறது. நீங்கள் அனைவரும் ஒவ்வொரு விதத்தில் திறமைசாலிகள் என்பதை நான் அறிவேன். டோக்கியோ ஒலிம்பிக் தொடரில் பங்கேற்கவுள்ள 26 பேர் கொண்ட இந்திய தடகள அணியில், தமிழ்நாட்டில் இருந்து 5 பேர் இடம் பிடித்துள்ளனர் என்பது தமிழ்நாட்டுக்குக் கிடைத்த பெருமை ஆகும். இந்த ஐந்து பேரும் கிராமப்புறத்தைச் சேர்ந்தவர்கள் என்பது இன்னும் சிறப்பு.அதிலும் மூன்று பேர் பெண்கள் என்பது இன்னும் பெருமைக்குரியதாகும். அடுத்தடுத்து நடைபெற இருக்கும் போட்டிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் இன்னும் ஏராளமானவர்கள் கலந்துகொள்ளும் சூழலை அரசு ஏற்படுத்தித் தரும் என்று உறுதியளிக்கிறேன்.
உங்களுக்குப் பயிற்சி கொடுத்த பயிற்சியாளர்கள் அனைவரையும் நான் பாராட்டுகிறேன். உங்களது பணி என்பது மகத்தானது. இந்த அரசு விளையாட்டுத் துறைக்கு ஊக்கமளிக்கும் அரசாக இருக்கும். திமுகவின் தேர்தல் அறிக்கையில் விளையாட்டுத் துறைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வாக்குறுதிகளை வழங்கி உள்ளோம். அவற்றைப் படிப்படியாக நிறைவேற்றுவோம். விளையாட்டுத் துறைக்கு ஊக்கமளிக்கும் அரசாக எமது அரசு இருக்கும். இந்த அரசுக்கு ஊக்கமளிக்கும் வகையில் ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ளும் நீங்கள் அனைவரும் பதக்கத்துடன் வரவேண்டும். அனைவரும் பதக்கம் பெற எனது வாழ்த்துக்கள் என்றார்.