» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
துாத்துக்குடி சிவன் கோயிலில் ஐப்பசி திருவிழா தேரோட்டம் கோலாகலம்!
ஞாயிறு 27, அக்டோபர் 2024 12:03:17 PM (IST)
துாத்துக்குடியில் பிரசித்திபெற்ற சிவன் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள சிவன் கோவில் என்று அழைக்கப்படும் அருள்மிகு பாகம்பிரியாள் உடனுறை சங்கரராமேஸ்வரா் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா ஆண்டு தோறும் வெகு விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டிற்கான ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கடந்த 19ஆம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது.
திருவிழாவில் தினமும் மாலை அம்மன் பல்வேறு அலங்காரங்களில், பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. காலை 7 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாரதனை நடைபெற்றது. காலை 10.30 மணிக்கு அம்மன் சிறப்பு அலங்காரத்துடன் தேரில் எழுந்தருளினார். மேலும் பக்தர்கள் கர கோஷத்துடன் தேர் வடம் பிடித்து இழுத்தனர். கீழ ரதவீதியில் இருந்து தேர் புறப்பட்டு நான்கு ரத வீதிகள் வழியாக தேரோட்டம் நடைபெற்றது. தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகராட்சி ஆணையர் மதுபாலன் ஆகியோர் தேரை படம் பிடித்து தொடங்கி வைத்தனர்.
தேருக்கு முன்பாக குதிரை, மயிலாட்டம், ஒயிலாட்டம் பொய்க்கால் குதிரை, தேவராட்டம், சிலம்பாட்டம் போன்ற பாரம்பரிய கலை நிகழ்சிகள் நடைபெற்றது. பாரம்பரியாள் அறக்கட்டளை சார்பில் சிவன் கோவில் அருகில் உள்ள நகராட்சி திருமண மண்டபத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் அன்புமணி, இந்து சமய அறநிலைத்துறை துணை ஆணையர் செல்வி, கோவில் செயல் அலுவலர் தமிழ்ச்செல்வி, கோவில் அறங்காவலர் குழு தலைவர் கந்தசாமி, ஸ்ரீ வைகுண்டபதி பெருமாள் திருக்கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், அறங்காவலர்கள் பிஎஸ்கே ஆறுமுகம் சாந்தி ஜெயலட்சுமி எல் ஆர் மந்திர மூர்த்தி, ஜெயபால் பாலசங்கர், முருகேஸ்வரி மண்டகபடிதாரர் தொழிலதிபர் கேஏபி சீனிவாசன் டிஏ சில்க் அதிபர் டிஏ தெய்வநாயகம், அபிராமி சில்க்ஸ் அதிபர் சந்திரசேகரன், பொதிகை ஸ்வீட் அதிபர் ஜோதி குமார், மாநகராட்சி கவுன்சிலர் சுரேஷ்குமார், மேயரின் நேர்முக உதவியாளர் மோகன், பகுதி செயலாளர் பிரபாகரன், முன்னாள் வட்ட செயலாளர் கீதா மாரியப்பன், திமுக நிர்வாகிகள் மாரிமுத்து உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி நகர துணை கண்காணிப்பாளர் மதன் தலைமையில் மத்திய பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் முன்னிலையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஐப்பசி திருக்கல்யாண திருவிழாவில் 11ம் திருநாளான 29ம் தேதி (செவ்வாய்க் கிழமை) திருக்கல்யான வைபவம் நடக்கிறது.