» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி ரயில் பயணியிடம் செல்போன், பணம் திருடியவர் கைது
ஞாயிறு 27, அக்டோபர் 2024 9:13:08 AM (IST)
திருச்சியில் ரயில் பயணியிடம் செல்போன், பணம் திருடியவர் கைது செய்யப்பட்டார்.
நாகர்கோவிலில் இருந்து தாம்பரம் சென்ற சிறப்பு ரயில் கடந்த வாரம் காலையில் திருச்சி ரயில் நிலையத்தில் 3-வது நடைமேடைக்கு வந்தது. இந்த ரயிலில் எஸ்.10 என்ற முன்பதிவு பெட்டியில் தூத்துக்குடி திருக்களூர் பகுதியை சேர்ந்த சேக்ஜாபர் (39) என்பவர் பயணம் செய்தார். திருச்சியில் இருந்து காலை 5.45 மணிக்கு ரயில் புறப்பட்ட நேரத்தில், படுக்கையில் வைத்திருந்த சேக்ஜாபரின் செல்போன் மற்றும் ரூ.12 ஆயிரம் இருந்த கைப்பையை காணவில்லை.
அதேநேரம் ஒரு வாலிபர் ரயிலில் இருந்து இறங்கினார். இதை கவனித்த அவர், ரயிலில் இருந்த டிக்கெட் ஆய்வாளர்கள் அஸ்கர்அலி, கார்த்திக் ஆகியோரிடம் தெரிவித்தார். அவர் உடனே துரிதமாக செயல்பட்டு செல்போன் இருக்கும் இடத்தை கண்டறியும் செயலி மூலம் சேக்ஜாபரின் செல்போன் இருக்கும் இடத்தை பார்த்த போது, அது அரிஸ்டோ ரவுண்டானா பகுதியை காண்பித்தது.
உடனே இதுபற்றி ரயில்வே பாதுகாப்பு படை வீரர்களுக்கு தகவல் கொடுக்கவே, அங்கு சந்தேகத்துக்கு இடமாக நின்ற வாலிபரிடம் சோதனை செய்தபோது, அவர் தான் சேக்ஜாபரிடம் கைப்பையை திருடியவர் என்பதும், அவர் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி இனாம் மணியாட்சியை சேர்ந்த செல்லப்பா என்பதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து செல்லப்பாவை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து செல்போன் மற்றும் பணம் இருந்த கைப்பையை மீட்டனர்.